RSS

மயக்கம் என்ன - எமோஷனல் மசாலா!


அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. அதுவும் சமீப காலங்களில் எமோஷனல் டிராமா என்கிற ஒரு தளமே விடுமுறைக்கு சென்று , திரும்பி வந்திருக்கிறது "மயக்கம் என்ன " மூலமாக.




தனுஷ் செல்வராகவன் இணைந்தால் என்ன நடக்குமோ ..அதே தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் பண்பாட்டு மீறல்கள், கொஞ்சம் சைக்கோத் தனம், ஆனால் இம்முறை பாஸிட்டிவாக ஒரு கிளைமாக்ஸ். அங்கங்கே பளிச்சிடும் லாஜிக் பொத்தல்களையும் மீறி மனதைக் கவர்ந்து விடுகிறது படம்.

( கார்த்திக்) தனுஷ் ஒரு ஃபோட்டொகிராஃபர். நண்பரின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்கள் கார்த்திக்கும் அவன் தங்கையும். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷிடம் அசிஸ்டண்ட்டாக சேரும் ஆசையில் அவர் முன் தன் புகைப்படங்களை காட்டுகிறான். அவமானப் படுத்தி அனுப்பி விடுகிறார்.ஆனால் அதே புகைப்படங்களை தன் பெயரில் பத்திரிக்கையில் வெளியிட்டு பேர் வாங்கிக் கொள்கிறார். இதனிடையில் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டுக்கும் (ரிச்சா) கார்த்திக்குக்கும் காதல். நண்பனை சமாதானப் படுத்தி ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். தான் எடுத்த புகைப்படத்துக்கு மாதேஷுக்கு விருது கிடைத்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழுந்து மன நலம் பாதிக்கப்படுகிறான். நிறைய குடித்து , மனைவியை அடித்து , அபார்ஷன் வரை கொண்டு போய் பின் மனம் திருந்தி மனைவியின் முயற்சியால் பத்திரிக்கைகளில் கவனிக்கப்பட்டு பிரபலமாகிறான். சர்வதேச புகைப்பட விருதுக்காக மாதேஷுடன் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றும் போட்டிக்கு கலந்து கொள்கிறது. யாருக்கு விருது என்பதுடன், கார்த்திக் மாதேஷுக்கு அழுத்தமாக தாங்க்ஸ் சொல்வதுடன் படம் முடிகிறது.

நமக்கு பாலச்சந்தர் படத்தில் ஆரம்பித்து விக்ரமன் படத்தில் முடிவது போல ஒரு பிரமை. ஆனாலும் அங்கங்கே தெரியும் செல்வராகவன் டச், படு ஷார்ப்பான வசனங்கள் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.



ஒரு ரெகுலர் தமிழ் சினிமா கதை தான். ஆனல் வசனங்களும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,முக்கியமாக ஜீ.வி யின் பின்னணி இசையும் (ஒரிஜினல் என்று நம்புவோம்) படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. தனுஷும் ரிச்சாவும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் நிச்சயமாக இதற்கு முன் நமக்கு பாலு மகேந்திரா படங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் வந்தவுடன் ஸ்க்ரீன் அருகே போய் ஆடும் விடலைகளைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில் தான் (காதல் என் காதல்). ஓட ஓட பாட்டை படமாக்கியிருக்கும் விதமும் வித்தியாசம். மற்றபடி மயக்கம் என்ன ஒன்றும் புது வகையான படமெல்லாம் இல்லை. இரண்டாவது பாதியில் திரைக்கதையில் சற்று தொங்காமல் இருந்திருந்தால் செல்வராகவனுக்கு இது இன்னொரு 7 ஜியாக இருந்திருக்கக்கூடும்.

உருக்கமான காதல் கதை என நினைத்து வந்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனாலும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது வேலாயுதம் மங்காத்தா வெற்றி பெறுவதை விட உத்தமமானது .

மயக்கம் என்ன - Typical Selvaraghavan Film.
**********************************************************************************

அழகிய சினிமா -- ஆதாமின்டே மகன் அபு




ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. நெகட்டிவான எந்த ஒரு விஷயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் - ஆதாமின்டே மகன் அபு!
சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்.

அபுவும் (சலீம்) ஆய்ஷும்மாவும் (ஸரீனா வஹாப்)  மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது  துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.

 மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப் படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. . அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை.மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும்  படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள் தமிழிலும் இது போன்ற சின்ன பட்ஜெட் ஆச்சர்யங்களை ஆதரித்தால் நமக்கு இன்னும் வெரைட்டியான படங்கள் கிடைக்கும்.

இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, ஒளிப்பதிவும் பிண்ணனி இசையும். சமீப காலங்களில் ஒரு மெலோடிராமவுக்கு தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு சினிமாட்டொக்ராஃபியை பார்க்க முடிந்ததே இல்லை. மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"

உலக சினிமாவை ஈரானிலோ கொரியாவிலோ தேட வேண்டிய அவசியமே இல்லை. அது இங்குதான் நம் லைப்ரரிகளில் தூங்கிகொண்டிருக்கிறது. அதை யார் எழுப்பி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பது தான் கேள்வி!

ஆதாமின்டே மகன் அபு - Slow but Sound Film!
**********************************************************************************

யுதம்….வேலாயுதம் - An Untold Story(?)


வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நிற்கிற தைரியம்!


உலக சரித்திரத்திலேயே இது வரைக்கும் படம் எடுத்தவங்களுக்கு தான் அவார்ட் குடுத்திருக்காங்க…ஆனா படம் பார்க்க வந்தவங்களுக்கு ஆஸ்கார் குடுத்த ஒரே படம் “யுதம்…வேலாயுதம்!”.



இதுவரைக்கும் விஜய் நடிக்காத கதை…

விஜய்க்கு ஒரு தங்கச்சி…சரண்யா மோகன்! தங்கச்சி மேல ரொம்ப பாசம். பாசமலரோடு சேர்ந்து ஊரில் லூட்டிகள் பல அடிக்கிறார்! தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிறது…சென்னைக்கு வருகிறார்! – என்ன ஒரு வித்தியாசமான ஒப்பனிங் பார்த்தீர்களா..?

இன்னொரு ட்ராக்கில் ஜெனிலியா- சென்னையில் ஒரு தைரியமான ஜர்னலிஸ்ட். சென்னை முழுக்க அராஜகம் நடக்கிறது. சர்வ சகஜமாக குண்டு வைக்கிறார்கள். பெண்களை கடத்துகிறார்கள். அதையும் – ஹோம் மினிஸ்டரே செய்கிறார். இந்தக் குற்றங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் நண்பர்களை இழக்கிறார். கத்திக் குத்து வாங்கி ரோட்டில் கிடக்கையில் அகஸ்மாத்தாக அவரைக் குத்தியவர்கள் காரில் குண்டு வெடித்து இறந்து விட அதற்கு காரணம் ஒரு சூப்பர் –ஹீரோ என கப்ஸா விட, ஆறாம் அறிவு கொண்ட தமிழ் ஜனங்கள் எல்லாவற்றையும் நம்புகிறார்கள். தியேட்டரில் நாமும் நம்புகிறோம். சென்னைக்கு வரும் விஜய் தற்செயலாக செய்யும் விஷயங்கள் அவர் தான் சூப்பர் –ஹீரோ வேலாயுதம் என ஜெனிலியா நம்புகிறார். வேலாயுதம் தான் உருவாக்கிய கற்பனை கேரக்டர் என்று விஜய்க்கு எடுத்து சொல்லி…. ..-ஹா…வ் போதும் விடுங்க…..எப்படியும் நீங்க படம் பார்க்கப் போறதில்ல….கதையையெல்லாம் முழுசா சொல்றதுக்கு….யப்பா எனக்கே போர் அடிக்குது பாஸ்.

ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வருவோம்! ஜெனிலியாவையே ரொம்ப ட்ரையா காண்பிச்ச ஒரே டைரக்டர் இவராதான் இருப்பாரு! –ஹன்ஸிகா கிராமத்துப் பொண்ணாம். என்னைக் காட்ட விடுங்கடான்னு அடம் பிடிக்குது. விஜய்- கேக்கவே வேணாம்! பத்து வருஷமா ஒரே கதைல நடிக்கிறவங்களைக் கூட பார்த்திருக்கோம்…ஆனா பத்து வருஷமா ஒரே படத்துல நடிக்கிற ஒரே –ஹீரோ அண்ணன் தான்! வர வர ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்துல கூட சென்னைக்கு ரயிலேறி வந்து ரவுடிகளை பந்தாடுவார் போல. பயம்மா இருக்குங்ணா…!

ரீமேக் ராஜா- சார்..தேசிய விருது வாங்க ட்ரை பண்றதா கேள்விப் பட்டோம். கண்டிப்பா சார்! அப்படியே புலிட்சர் விருது…அமைதிக்கான நோபல் விருதுக்கும் முயற்சி பண்ணீங்கன்னா… நாட்டுல நிறைய மழை பெய்யுமுன்னு டி.வி.ல ரமணன் சொன்னாரு!

படத்துல ஒரே ஆறுதல் சந்தானத்தோட காமெடி! அதிலும் கண்ணாடி முன்ன நின்னு மனசாட்சியோட பேசற ஒரு சீன் போதும். டிக்கெட் பணம் செரிச்சிடுச்சு!

இசை- விஜய் ஆண்டனி! இவரால என்ன பண்ணிட முடியும் பாவம்! அதே கேரக்டர்ஸ்..அதே ஆர்ட்டிஸ்டுங்க…அதே சிச்சுவேஷன்ஸ்…

வேற என்னத்தைங்க சொல்றது! உடைஞ்ச தமிழ் பேசற பாகிஸ்தான் தீவிரவாதிகள்… விஜயகாந்த் பட வில்லன்கள்... ஸ்டீரியோ டைப் ரவுடிகள்..மாமன் பொண்ணுகள்..பாசக்கார தங்கச்சிகள்…அடித்து துவம்சம் செய்து கிளைமாக்ஸில் லெக்சர் எடுக்கும் –ஹீரோக்கள்! ஒரு பாப்கார்னை நூறு ரூபா வைத்து விக்கும் நல்லவர்கள்..தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டே பார்க்கும் ஜனங்கள்…பார்க்கிங் டோக்கனை 10 ரூவாயிலிருந்து இருபதாக்கியிருக்கும் அப்பாவிகள்…எதுவும் மாறலை!

ஆனா ஒண்ணே ஒண்ணு மச்சி!

உங்கள்ல நிறைய பேரு ஏழாம் அறிவு பார்க்க்கூடும்…ஆனா ஏழு அறிவு இருக்கிற ஒருத்தனாலதான் வேலாயுதம் பார்க்க முடியும்!
*****************************************************************************************

Stanley ka Dabba - பொய்கள் உரைக்கும் உண்மை



கலைப் படங்களால் பொதுஜனத்துக்கு என்ன பெரிதாக பிரயோஜனம் என்று பல நேரங்களில் யோசித்ததுண்டு. கண சத்ரு(1989) என்கிற சத்யஜித்ரே படம். பிரபல ஆங்கில நாடகத்தின் தழுவல். தவறான பைப் லைன் இடுவதால் ஒரு கோவில் குளத்தின் தண்ணீர் மாசுபடுவதும் அதை மக்களுக்குத் தெரியப் படுத்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒரு பேராசிரியர் போராடுவதும் தான் கதை. ரொம்பவும் சாதாரணமான கதை தான். விசேஷம் என்னவெனில் படம் முழுக்க ஒரு காட்சியில் கூட அந்தக் குளம் காண்பிக்கப்பட்டிருக்காது.

தமிழிலும் நீர் மாசுபடுவதை மையமாக வைத்து ஒரு திரைப்படம் வந்தது. விக்ரம் ஜோதிகா விவேக் என பெரிய ஸ்டார்களை வைத்து உப்பு காரம் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து சூப்பர் ஹிட் ஆன "தூள்" என்கிற திரைப்படம் தான் அது. இப்பொழுது யோசித்தால் தூள் படம் என்றவுடன் கிளைமாக்ஸ் சண்டைப் பாடலும் விவேக் காமெடியும் தான் சட்டென ஞாபகத்துக்கு வரும். இப்பொழுதும் கணசத்ருவை யோசித்தால் திரையிலேயே ஒரு முறை கூட வராத அந்த குளமும் அதன் பின் விளைவுகளும் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

எதற்காக இந்த வியாக்கியானமென்றால் பல பெரிய விஷயங்களை பேசும் பொழுது அதன் முப்பரிமாணத்தையும் காட்டித்தான் புரிய வைக்க வேண்டுமென்பதில்லை. கலவரத்தின் பாதிப்பை உணர வைக்க கலவரத்தையே காட்ட வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. அந்த வகையில் நாம் படமெடுப்பதற்கு இன்னும் எவ்வளவோ களங்கள் பாக்கி இருக்கின்றன. அதில் ஒன்றை மிகவும் சிம்பிளாக , கொஞ்சம் நறுக்கென சொல்லியிருக்கும் படம் தான் (Stanley ka Dabba). அமோல் குப்தே இயக்கி பார்த்தோ எனும் சிறுவன் நடித்திருக்கும் படம்.

குழந்தை தொழிலாளர் முறை என்பது நம் ரத்தத்தில் கலந்து விட்ட தேசிய அயோகியத்தனங்களில் ஒன்று. அனைவருக்கும் கல்வி என்பதே கனவாக இருக்கும் தேசத்தில் தான் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியமாகிக்கொண்டிருக்கும் ஒரு அதிசய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த வேடிக்கை முரண் நம்மைப் போன்ற வீர்யமே இல்லாத ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம்.

Stanley ka Dabba - ஆகா ஓகோவென்ற கதையெல்லாம் இல்லை. ஒரு வழக்கமான நடுத்தரவர்க்க ஹை ஸ்கூல். ஸ்டான்லி எனும் நான்காம் வகுப்பு சிறுவன்.இடது கை பழக்கமுள்ள க்ரியேடிவிட்டி சற்றே அதிகமுள்ள சிறுவன். ஸ்வைன் ஃப்ளூ உபயத்தில் விடுமுறை அதிகமானதால் போர்ஷன் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நேரத்தை நீட்டிகிறது பள்ளி நிர்வாகம். ஒரு நாளைக்கு இரண்டு பிரேக் என அறிவிக்கிறார்கள்.ஸ்டான்லிக்கு சொந்தமாக லன்ச் பாக்ஸ் கொண்டுவர இயலாத சூழ்நிலை. நண்பர்களிடம் உண்மையை சொல்லவும் முடியவில்லை. இதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் கதையும் சொல்கிறான், அவர்கள் நம்பும்படியாக. இயலாத பட்சத்தில் டாய்லெட்  ரூமில் உள்ள தண்ணீரைக் குடித்தே நாட்களைக் கடத்துகிறான்.ஒரு கட்டத்தில் இது நண்பர்களுக்குத் தெரிந்து விடுகிறது.தங்கள் உணவையே அவனுக்கும் கொடுத்து பகிர்ந்துண்கிறார்கள். வில்லன் ஹிந்தி ஆசிரியர் பாபு பாய் (அமோல் குப்தே- இயக்குநர்) ரூபத்தில் வருகிறார். லன்ச் பாக்ஸ் கொண்டுவரவில்லையென்றால் பள்ளிக்கு வரக்கூடாதென்கிறார்.

ஹிந்தி ஆசிரியருக்கு பாடம் நடத்துவதை விட ஒவ்வொருவரின் லன்ச் பாக்ஸில் தான் ஈடுபாடு.கூச்ச்மில்லாமல் எல்லாருடைய டிஃபன் பாக்ஸிலும் கைவைக்கிறார். சக ஆசிரியர்கள் உட்பட வேண்டாவெறுப்புடனே நடந்து கொள்கின்றனர்.இதற்கிடையில் ஸ்டான்லிக்கு அவர் இழைத்த கொடுமை வெளிப்படுகிறது. குற்றவுணர்வுடன் ஸ்டான்லிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பள்ளியை விட்டு செல்கிறார். மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் இங்கிலீஷ் டீச்சர், கண்டிப்புடன் நடந்து கொள்ளும் சயின்ஸ் டீச்சர் என இன்ன பிற கேரக்டர்களும் குறிப்பிடத்தகுந்தவை. அதிலும் சயின்ஸ் ப்ராஜக்ட் செய்யச் சொல்லும் பொழுது ஒரு லைட் ஹவுஸை செய்கிறான் ஸ்டான்லி.அதை மிகவும் பாராட்டி எனக்கு அதை தருவாயா என்று கேட்கிறார் இங்கிலீஷ் டீச்சர்.அதே லைட் ஹவுஸை புத்தகத்தில் இல்லாததை ஏன் செய்கிறாய் என கண்டிக்கிறார் சயின்ஸ் டீச்சர். நம் பாடத் திட்டத்தின் மகத்துவத்தை(?) விளக்கும் அற்புதக் காட்சி அது.  ஸ்டான்லியின் இடது கைப் பழக்கத்தை (Right is Right) என்று சொல்லி வலது கையில் எழுத வைக்கிறார் ஹிந்தி ஆசிரியர். நம் ஆசிரியர்களின் ஒழுக்கம் பற்றிய அபத்தமான புரிதலை திரைக்கதை போகிற போக்கில் காட்டிவிடுகிறது. அதே போல் ஸ்டான்லி எழுதும் ஆங்கில கட்டுரைகளில் கற்பனை மிளிற்கிறது. தன் அம்மா பஸ்ஸில் இருந்து குதிப்பதாகவும் ரயில்களைத் தாண்டி பறப்பதாகவும் எழுதுகிறான் ஸ்டான்லி. அதை ஸ்டாஃப் ரூமில் சக ஆசிரியர்களுக்கு வாசித்துக் காண்பிக்கிறார் ஆங்கில ஆசிரியை.  சோகம் என்னவெனில் ஸ்டான்லிக்கு அப்பா அம்மா இருவரும் கிடையாது. ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் சிறுவன் என்று காட்டுகிறார்கள். அதுவும் பார்வையாளர்களுக்கு மட்டுமே. படத்தில் எந்த ஒரு கேரக்டருக்கும் அவனுடைய நிஜமான பின்னணி தெரியாது. கிளைமாக்ஸில் தன் அம்மா தினமும் செய்து தருவதாக சொல்லி ஸ்டான்லி தன் ஹோட்டலில் மிஞ்சுவதை ஒரு லன்ச் பாக்ஸில் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுக்கிறான்,. அனைவரும் ஆர்வத்துடன் அவன் பொய்களைக் கேட்டவாறே அவன் தரும் பதார்த்தங்களை சப்புக் கொட்டி சாப்பிடுவதுடன் படம் நிறைவடைகிறது.

பார்த்தோவின் நடிப்பை அபாரம் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தை.எக்ஸ்பிரஷனில் வித்தை காட்டியிருக்கிறான். தேசிய விருது வெல்ல வாய்ப்புண்டு.எல்லோருமே subtle  ஆக நடித்திருக்கிறார்கள், பாபு பாயாக வரும் அமோல் குப்தேயை தவிர. அந்த கேரக்டரே கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது. பாபு பாய் எல்லோருடைய உணவிலும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவது பயங்கர நெருடலாக உள்ளது. படத்தின் விசேஷம் அசலான குழந்தைகள் உலகம். அஞ்சலி பாணி அதிகப் பிரசங்கித்தனமில்லாத அசலான குழந்தைகள் உலகம். அதனுள் பயணிக்கும் போதே ஒரு குதூகலம் வந்து விடுகிறது. படத்தின் இன்னொரு விசேஷம் படத்தில் நடிக்கும் மாணவர்களின் பள்ளி நேரத்தை தொந்தரவு செய்யாமல் சனிக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. படம் விருது வாங்குகிறதோ இல்லையோ அந்த சிறுவன் பார்த்தோ நிச்சயம் ஏதாவது ஒரு விருது வாங்க வேண்டும்.

தமிழில் என் ஞாபகத்தில் ஜானகி விஸ்வநாத்தின் "குட்டி" படம் மட்டுமே குழந்தை தொழிலாளர் கொடுமையைப் பற்றிப் பேசியது. விபசாரம், போதை இதையேல்லாவற்றையும் விட கொடுமையானது கு.தொ.கொடுமை. இந்தியாவில் மட்டும் ஒன்னேகால் கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு சினிமாவின் இலக்கணமோ விருதுக்கு அத்தியாவசியமான திரைக்கதையோ ஸ்டான்லி கா டப்பாவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம் மறந்து கொண்டிருக்கிற , வாழ்க்கையின் ஓட்டத்தில் சகஜமாகிவிட்ட ஒரு வன் கொடுமையின் தீவிரத்தை அசைத்துப் பார்க்கிற சினிமாவை கொண்டாடுவோம்.
**********************************************************************************


அவன் இவன் - பாலாவின் நடுநிசி நாய்கள்


அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவதை விட நடிப்பதும் படமெடுப்பதும் கஷ்டமான காரியம் தான்...ஆனால் நீங்கள் தேசிய விருது வாங்குவதற்காகவும் மனதில் இருக்கும் வக்கிரத்தை அவிழ்த்து வைப்பதற்காகவும் நாங்கள் நூறு நூற்றைம்பது கொடுத்து டிக்கெட் வாங்கி முப்பது நாற்பது என பார்க்கிங்கிற்கு அழும்போது தான் வேதனையாக இருக்கிறது.




தேவையற்ற உடலை வருத்திய நடிப்பு;எதிர்பாராத ட்விஸ்டுகளோ சுவாரஸ்யமோ, எதுவுமே இல்லாத மொன்னையான கதை;அதற்கு லாஜிக் பொத்தல்களுடன் ஒரு திரைக்கதை; மட்டமான Casting ;உயிரே இல்லாத பின்னணி இசை. இது தான் அவன் இவன்.

இந்த மாதிரி ஒரு கிராமத்தை தமிழகத்தில் எங்கே கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை. சகஜமாக திருடுகிறார்கள்.ஜட்ஜ் கிரிமினலைக் கூப்பிட்டு வீட்டு பீரோ லாக்கரை உடைக்க சொல்கிறார்.அவரே ராஜ மரியாதையோடு சுழல் விளக்குப் பொருத்திய அவரது அரசாங்க காரில் கிரிமினலை வழியனுப்பி வைக்கிறார்.அதை சாதனையாக கருதி பேண்ட் வாத்தியங்களோடு அவரது அம்மா குத்தாட்டம் போடுகிறார். இன்னொரு ஹீரோவின் அம்மா பீடி குடிக்கிறார்.பையனிடம் சரக்கு கேட்கிறார்.சக்களத்தியோடு கெட்ட வார்த்தையில் மோதிக் கொள்கிறார்.

இதையெல்லாம் விட கொடுமையின் உச்சக்கட்டம் அந்த கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன். இத்தனை வருஷ தமிழ் சினிமா..ஏன் உலக சினிமா வரலாற்றில் கூட போலீஸ்காரர்கள இவ்வளவு அவமானப் படுத்திப் பார்த்ததில்லை.எண்பதுகளில் வரும் சினிமாக்களில் உலக உருண்டையை உருட்டிக் கொண்டே டயலாக் பேசி கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிற்பாடு வருவார்களே...அவர்களை விட அவன் இவன் போலீஸ்காரர்கள் படு மோசமாக காட்சியளிக்கிறார்கள்.கிரிமினல்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுப்பதெல்லாம் காமெடி என்றால்..ஸாரி பாலா..கண்ணீர் முட்டுகிறது.

அதுவும் அந்த ஹீரொயின்கள். மற்றவர்கள் படத்தில் ஹீரோயின்கள் எஞ்சினியரிங் காலேஜ் என்றால் பாலா படத்தில் எந்த காலேஜ்..ம்ம்..அதே தான்... டுடோரியல் காலேஜ்.இன்னொரு ஹீரோயின் கான்ஸ்டபிள்.விசகாலின் மாறுகண்ணையும் மீறி உருகுகிறார்.அதுவும் அந்த டுடோரியல் பொன்னு எதற்காக ஆர்யாவை காதலிக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.ஆர்யா அந்த பெண்ணை கவரிங் நகைகளை காட்டி ஏமாற்றியதற்காக குட்டிக்கரணம் போட சொல்கிறார், லவ் வந்து விடுகிறது.விஷால் அந்த லேடி கான்ஸ்டபிளிடம் பொன்னுங்க போடற பேண்ட்ல எதுக்கு ஜிப் என்று கேட்க,அதற்கும் லவ் வந்து விடுகிறது.இந்த கருமத்திற்கு மணிரத்னம் பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் எவ்வளவோ தேவலை.அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவார்கள்.அவ்வளவே!



படத்தின் ஒரே ஆறுதல் வில்லன் ஆர்.கே!பத்து நிமிடமே என்றாலும் பரவாயில்லை...குறிப்பிடும் படியான எக்ஸ்பிரஷன்கள்.ஜி.எம்.குமாரை வீணடித்திருக்கிறார்கள்.தைரியமாக இந்த வயதில் அம்மணமாக நடித்திருக்கிறார்.

சமகாலத்தின் முக்கியமான ஆளுமையான எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள் எதிர்பார்ப்புக்கு அருகில் கூட இல்லை.வலிந்து திணிக்கப் பட்ட கெட்ட வார்த்தைகள், எதார்த்தம் என்ற பெயரில் நடக்கும் உரையாடல்கள் படத்தின் மீதான அபிமானத்தை வெகுவாக குறைக்கிறது. அப்பட்டமான வட்டார மொழி இந்த படத்தை சறுக்க வைக்கிறது.

வழக்கமாக பாலாவின் படங்களில் படும் நெடுக இழையோடும் நகைச்சுவை இதில் சுத்தமாக இல்லை.அதனாலேயே ஜி.எம்.குமார் அம்மணமாக ஓடும் போது நமக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக வெறுப்பு வருகிறது.அதுவும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின் எப்போதடா ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து வில்லனை சகதியில் முக்கி சாகடிப்பார்கள்,எப்போதடா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறது.

டாப் நட்சத்திரங்களின் கால்ஷீட்;தன் வழக்கமான பாணி என்றைக்கும் செல்லுபடியாகும் என்கிற அதீத தன்னம்பிக்கை;ஆனால் அதே புளித்த மாவு என பாலா இன்னொரு மணிரத்னமாக மாறிவிடாமல் இருந்தால் சரி!




அவன் இவன் - Definitely Boring!

**********************************************************************************

கோ- பத்திரிக்கை (அ) தர்மம்



ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்கள் தாம்.அதாவது காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக சித்திரம்.அப்படி எடுத்தால் தான் தமிழ் ஜனம் ஓட வைக்கும் என்கிற புராதன காலத்து நினைப்பில் எடுக்கப்பட்ட மற்றுமொரு காவியம் தான் 'கோ'.

கல்லூரி லெக்சரரானாலும் சரி...இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்டானாலும் சரி...அதாகப்பட்டது தமிழ் சினிமா நாயகன்மார் அனைவரும் வேகமாக நடனமாட வேண்டும். பைக்கிலோ காரிலோ சேஸ் செய்து வில்லன்களை அடிக்கவேண்டும்.சடாரென நியூசிலாந்திலோ ஸ்விட்சர்லாந்திலோ ஹீரோயின் இடுப்பை அணைத்துக் கொண்டு மழைத்துளி முன்பனி என்று பேத்தலாக பாடிக்கொண்டே ஒரு டான்ஸை போட வேண்டும்.திடீரென மெழுகுவர்த்தி ஏத்தி ஊழலை ஒழிக்க முயற்சிப்பது போல இந்த அபத்தங்களை ஒழிக்க ஏதாவது செய்தால் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்.

ஒரிஜினல் வில்லன் யாரென கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கும் சாதாரண கதை.அதற்கு அப்படியொரு சொதப்பலான திரைக்கதை.சுவாரஸ்யமாக கதை நகரும்போதெல்லாம் அதை அம்போவென விட்டுவிட்டு கலர் காஸ்ட்யூம்களில் பாறை இடுக்கிலும் மலை முகடுகளிலும் ஸ்லோவாக கையை தூக்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.அதிலும் கார்த்திகா இரவு வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூட ஃபுல் மேக்கப்பில் தான் போகிறார்.இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.அதிலும் பக்கத்துவீட்டுப் பையனுக்கு மேலாடையைத் திறந்து காட்டும் காட்சி.டைரக்டருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.

ஜீவா முதலில் ஒரு வங்கிக் கொள்ளையை படம் பிடிக்கிறார் .பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் ஒரு அநியாயத்தை.பின்னர் முதலமைச்சர் செய்யும் ஒரு அராஜகத்தை.அப்படியே அரசியலுக்கு வரும் நல்லவர்களின் நன்னடத்தைகளை துரு துருவென படம் பிடித்தபடியே திரிகிறார்.இப்படியே பிடித்து பிடித்து ஆட்சியையே மாற வைத்து விடுகிறார்.அவ்வப்போது இரண்டு ஹீரோயின்களோடும் முற்போக்கு வசனங்கள் பேசுகிறார்.படத்தின் ஆரம்பத்திலும் சரி..முடிவிலும் சரி...அஜ்மல் செய்யும் அண்டர்பிளே நடிப்பு மட்டுமே ஆறுதல்.

ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! எல்லாமே இந்த படத்துக்குத் தேவையற்ற ஆனால் ரசிக்கும்படியான பாடல்கள்.ஒளிப்பதிவு கச்சிதம்

டைரக்டருக்கு!

நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை. சென்ற படத்தில் 'Mariah Full of Grace ' ஐ ஒரு போர்ஷனுக்குப் பயன்படுத்தி இருந்ததைப் போல இதில் அப்பட்டமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் 'State of Play ' ,' Vantage Point ' போல எடுக்க வேண்டிய படத்தை தமிழ் சினிமாவின் ரெடிமேட் குப்பை திரைக்கதை அம்சங்களுக்குள் திணித்து இம்சித்திருக்க வேண்டாம். சகிக்கவில்லை!

கண்டபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,வங்கிக்கொள்ளை அடித்து நக்ஸல் பாரி இயக்கத்தை வளர்த்து தேர்தல் அமைப்பில் புகுந்து மக்களுக்கு அவசியமான மந்திரி சபையா? லாஜிக்குகளின் சக்கரவர்த்தி ஷங்கரே தலையில் அடித்துக் கொள்வார்.முடியலை!


கடைசியாக...


1.மசாலா குப்பை எனத் தெரிந்தும் வீம்புக்கென நொள்ளை நொட்டு சொல்லி அல்லது பாராட்டி விமர்சனமெழுதும் பதிவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

2.தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! ஐ.பி.எல் அவ்வளவு போரடிக்கிறதா என்ன?

**********************************************************************************

அதிரடி கருத்து கணிப்பு...பங்கேற்க கடைசி வாய்ப்பு..!


தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகளின் தாக்கம் அசாத்தியமானது. கேள்விகள் அனைத்தும் கவனமாகத் தொகுக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி அலசி ஆராய்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முதல் இலவசத்திட்டங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் ஒரு நடுநிலைமையான கருத்துக் கணிப்பு...இதோ உங்கள் பங்களிப்புக்கு...!


குஷ்பூ மாதிரி குழந்தை பிறக்கவேண்டுமென்றால்

1.திமுகவுக்கு ஓட்டுப் போடணும்

2.குலசாமிக்குப் பொங்கல் வைக்கணும்

3.சுந்தர்.சி ஒத்துக்கணும்

வண்டு முருகனின் தேர்தல் பிரசாரம்

1.ஊத்திக்கும்

2.திமுகவுக்கு உபயோகமா இருக்கும்

3.இதுவரையில சிரிப்பொலில வராத காமெடி

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது ஏன்?

1.விஜயகாந்துக்கு செல்வாக்கு கூடிடும்னு பயம்

2.விஜயகாந்த் அடிச்சிருவாரு

3.கேப்டன் குடிச்சுட்டு வந்து பேசும்போது மேல வாந்தி எடுத்துட்டாருன்னா!

வைகோ என்ன பண்ணிட்டு இருப்பார்?

1.நாஞ்சில் சம்பத்தோட சீட்டு விளையாடிட்டு இருப்பார்

2.வாலிபால் ஆடிட்டு இருப்பார்

3.சன் டி.வி சீரியல் பார்த்துட்டு இருப்பார்

கார்த்திக்கின் பிரசாரம் ஏன் டி.வி யில் காண்பிக்கப்படுவதில்லை

1.ஏற்கெனவே ரெண்டு காமெடி சானல்கள் இருக்கின்றன

2.கார்த்திக் கட்சிக்காரங்களே சேனல் ஆஃபீசை அடிச்சு நொறுக்கிடுவாங்க

3.தற்கொலைக்கு தூண்டும் வழக்கில் மாட்டிக்கொள்வோம் என டிவி சேனல்கள் அஞ்சுவதால்

தங்கபாலு என்பவர்

1.மயிலாப்பூரில் டீக்கடை நடத்துபவர்

2.கொளுத்துவேலை செய்பவர்

3.தானே உட்காரும் தானைத் தலைவன்

கருணாநிதி முதல்வரானால்,ஜெயலலிதா செல்லப் போவது

1.கொடநாடு

2.திராட்சைத்தோட்டம்

3.சிறுதாவூர்

ஜெயலலிதா முதல்வரானால், கருணாநிதி செல்லப்போவது

1.பாளையங்கோட்டை

2.புழல்

3.வேலூர்

காங்கிரஸை தோற்கடிக்க வேலை செய்வது

1.சீமான்

2.திமுக

3.அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்

2016 ல் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்?

1.வீட்டுக்கு வீடு மெடிக்கல் காலேஜ் சீட்

2.வீட்டுக்கு வீடு கார்

3.எல்லோருக்கும் தினம் ஒரு லிட்டர் பெட்ரோல்



முடிவுகள்

.

.

.



எவன் கருத்துகணிப்பு நடத்தினாலும் எதையாவது கிழிக்கப் போறமாதிரி கருத்து சொல்ல வந்த டுபாகூர்களுக்கும் , எவன் ஜெயிச்சாலும் ஆப்படிப்பான் என்று தெரிந்தே அஞ்சு வருஷத்துக்கொரு முறை வாயில் வென்ணயடித்துக்கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் ,மேலும் இதையும் ஒரு கருத்துகணிப்பு என்று நம்பி வேலையை விட்டு வாசித்த அனைத்து வாக்காள மடையர்களுக்கும் நன்றி.

(மானங்கெட்ட) கூட்டணி கட்சி தலைவர்களுக்கு


அன்பு சகோதரி எழுதுவது!


எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?

சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?

எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?

இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.

அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?

மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!

விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!


இப்படிக்கு

உங்கள் அன்பு சகோதரி


பின் குறிப்பு :

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

-- கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்லவிரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!

***********************************************************************************

(மானங்கெட்ட)தங்கபாலு ஸ்பீக்கிங்- A பட்டாபட்டி Article


வணக்கம் ப்ளாக்கர்ஸ். ’இந்த வணக்கம் தேர்தலுக்காக’- என நீங்கள் நினைத்தால், தவறான முன்  உதாரணமாகிவிடும். இந்த ரெட்டையும் வெளியூர்காரனும் ஒவ்வொரு தலைவரையும் கைக்கு வந்தபடி எழுதி குழப்பி வருவது நீங்கள் அறியாததல்ல!


இது வரை அவர்கள் எழுதிய பதிவுகள், விஜய், கேப்டன் மற்றும் தற்போதைய முதல்வர் பற்றி படித்ததும், ஆம்... அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர், என்று என்அன்னை சோனியா மீது ஆணையாக,அடக்கமாகக் கூற  கடமைப்பட்டுள்ளேன்
 
நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! அதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ணமுடியுமா?தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு,  உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..!
 
காங்கிரஸில் ஏழெட்டு கோஷ்டிகள் இருப்பதாக மீடியாக்கள் கூவுகின்றன.அவர்களுக்கு நான் ஒன்று கூற கடமைப்பட்டுள்ளேன்.

"நீங்கள் கூறுவது சுத்தப் பொய்!

உண்மையில் எங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. அதை கணக்கெடுக்கத்தான் நாங்கள் உட்கட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் ஓட்டுப் போடும் தொண்டர்களை விட போட்டியிட்ட நபர்கள் அதிகமாக இருந்ததால் வழக்கம் போல டெல்லி சொல்வதையே கேட்டுக்கொண்டோம்.இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டி விடுவதற்கென்றே தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி அதில் எல்லாக் கோஷ்டியை சேர்ந்தவர்களும் இடம்பெற செய்ய முயற்சி செய்தேன்,

உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்!
 
சரி இன்னொன்று கேட்கிறேன்!


தமிழகமுதல்வரின் கட்சியில் கோஷ்டிகள் இல்லையா? , அதிமுக-வில் கோஷ்டிகள் இல்லையா?. எங்களை மட்டும் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள்? எங்களின் குறிக்கோள், ’தமிழர்களுக்கு பணி செய்துகிடப்பதே’ என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?


சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும்.

ஆனால், அதில் தோல்வி அடைந்ததைக்கண்டு மனம் வருந்திய மகான்(?)களில் நானும் ஒருவன்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ்...மாநிலத்தில் ஏன் இல்லை?. இதை நான் கேட்கவில்லை.. மக்கள் கேட்கிறார்கள்!
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் ...தெரிந்தால் சொல்லமாட்டோமா?

மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.


ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.

அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.

அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?.

வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?.

கேட்கிறார்கள் கேள்வி.

ஏன் இந்த கூட்டணி?. இது உங்கள் மனதில் தோன்றும். அன்னையின் புதல்வனுக்கு அஷ்டசனி நடப்பதால், கலைஞருடன் கூட்டு சேர்ந்தோம். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆறறிவு அற்றவர்கள்.

கூட்டணி பேச, என் மகனை அழைத்துச்சென்றேனாம்?. இதில் என்ன தவறு?. பாங்கில பணம் பெறும்போது, பாதுகாப்புடன் செல்வதில்லையா?. 60 வருட ஆட்சிக்கட்டிலில், இந்தியா எப்படி முன்னேறி உள்ளது?. சிந்தியுங்கள்..

வரும் தேர்தலில், மனைவிக்கு சீட் ஒதுக்கியதாக சிலர் கூவல்.

விலைவாசி கன்னாபின்னா என்று உயர்ந்து, நடுத்தரமக்கள் , பிச்சைக்காரார்கள் ஆகிவருகின்றனர். அந்த வளர்ச்சி என்னையும் பாதிக்காதா?. மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு மனைவியைத்தவிர யார் துணை(?)புரிவார்? ஒரு குடும்பதில், கணவன் மற்றும் மனைவி வேலைக்குப்போவது தவறா?.. கேட்கிறேன். மனசாட்சிப்படி பேசுங்கள் மனிதர்களே.

எங்கள் தலைவர் ராகுல்ஜீக்கு பெண் பார்த்து, அடுத்த காந்தியை, நாடு பெறும் வரை, மகன் மற்றும் மனைவியுடன், எங்கள் தலைவி சோனியாவுக்கு உழைப்பதே என் கடமை. இந்தக் கூட்டத்தில், சிலர் சங்கு கூதுகிறார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்களா, காங்கிரஸ்காரர்கள்? நாங்கள் ஊதாத சங்கா?.

ஆகவே, ஒவ்வொரு வாக்காளரும், உங்கள் பொன்னான ஓட்டை, காங்கிரஸ்-க்கு அதாவது.. தங்கபாலு காங்கிரஸ்க்கு போட்டு, வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களுக்கு சேவைசெய்ய நாங்கள் இருக்கிறோம்.

வாழ்க அன்னை.. வளர்க தங்கபாலு கோஷ்டி!

( யோவ்.. போட்டோ.. மகனையும் அப்படியே எடுயா.... தக்காளி.. அடுத்த அஞ்சு வருஷம்.. ம். கு^%$@#ஞ்சவெச்சு, தண்ணி குடிச்சாவது, பதவியை விட்டு இறங்ககூடாது.. ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். அதுவரை, மக்களை.... அப்படியே வெச்சிருய்யா பெருமாளே.. )
 
Written By Pattapatti
*************************************************************

(மானங்கெட்ட) விஜய் ரசிகனுக்கு




வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!
இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!

உன் தலைவன்ட்ட சொல்லிவை...அரசியல்னா மூஞ்சி நிறைய மஞ்சளை அப்பிக்கிட்டு சாமர்சால்ட் அடிச்சுட்டு பட்டாசு பாலுவை கலாய்க்கிறது இல்ல...அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! ஒரு கைல ஃபோன்ல பேசிக்கிட்டே இன்னொரு கைல ஸ்னைப்பர் ல குறி பார்த்துட்டு இருப்பானுங்க. ஒரு கைல தன் வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கும்போதே இன்னொருத்தன் வேட்டியை உருவற ரியல் வில்லனுங்க சலம்புற இடம்.

வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?

நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!

நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.

அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை?

சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?

இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!

ஓவர் டு வெளியூர்!
****************************************************************************

(மானங்கெட்ட) தொண்டனுக்கு - கேப்டன் ரைட்டிங்-அக்காங்!



மானங்கெட்ட தொண்டனுக்கு,


நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..!

டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங்க....இருங்கடா ...இது நான் நடிச்ச சினிமா இல்லடா..தேர்தல் பிரச்சாரம்...அதுவும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம்...அக்காங்..!

எப்படா ஆட்சியைப் பிடிப்போம்..நாமளும் எம்.எல்.ஏ மந்திரி ஆகி நால்லா சம்பாதிக்கலாம்னு கனவோட இருக்குற என் ரசிகக் கண்மனிகளா...உங்க ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்...! என் கால் கவுட்டி மேல சத்தியமா நாம கண்டிப்பா ஜெய்க்கிறோம்..!.. அக்காங்..!

நாம ஜெய்ச்சிருவாமான்னு சந்தேகமா கேக்குற சனியன் புடிச்ச ஈத்தரைங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்... போன தேர்தல்ல நாம வாங்கின ஓட்டுசுமார் முப்பது லட்சம். தக்காளி அதுல பாதி பேரு என்னோட எதாச்சும் ஒரு சினிமாவ ஒரே ஒரு தடவ பார்த்துருந்தா கூட நான் நல்ல துட்டு பார்த்துட்டு ஓரமா போய் தண்ணிய போட்டுட்டு சத்தமில்லாம படுத்துருப்பேன்....இப்ப பாரு அரசியலுக்கு வந்துட்டேன்..இதெல்லாம் உங்களுக்கு தேவையா..? ஒழுங்கா என் படத்த பார்த்துருக்கலாம்ல....?.. இப்ப இவன் தோத்து போய்ட்டா மறுபடியும் சினிமால நடிக்க வந்துருவானேன்கர பயத்துலயாச்சும் மக்கள் எனக்கு வோட்டு போடுவாங்கடா..நான் ஜெய்ச்சிருவேன்...!

அதானால நீ தேவையில்லாம பயந்து என்னையும் பயமுறுத்தாத...இப்பல்லாம் பயம் வர்றப்ப முன்னாடி மாதிரி மடில படுத்து அழுக என் பொண்டாட்டி வேற விட மாட்டேன்கர... ஊசிப்போன சாராய நாத்தம் அடிக்குதாம் என்மேல.. எங்க விட்டேன்..ஆங்...எலெக்சன்ல ஜெய்க்கிறது...அதனால நீ தைரியமா போய் நீ எலெக்சன் வேலைய பாரு...! நாம ஜெய்க்கிறோம்..!

முதள்ள தனியா நின்னோம்...மக்கள் ஓரளவுக்கு ஓட்டுப் போட்டாங்க.அப்புறம் ஆண்டவனோட கூட்டணி வச்சோம்.லேசா மூஞ்சிய திருப்பினாங்க... இனிமேயும் தனியா நின்னா வைகொ ராமதாஸுக்கு அடுத்தபடியா நாம தான் காமெடி பீஸுன்னு நினைச்சி காரி துப்பிட்டு கழுவி ஊத்திட்டு போயிருவாங்கே..மூளையும் கலரும் கம்மியா இருந்தாலும் உன் தலைவன் ஆக்சன் ஸ்டாருடா... வெச்சேன் பார்த்தியாகூட்டணிய..!



ஏண்டா நாயே கட்சி ஆரம்பிச்சேன்னு என்ன பார்த்து எல்லாரும் கேக்றாங்க.சொல்றேன் கேட்டுகங்க.. தமிழ்நாட்டு அரசியல் என் கம்மங்கோட்டை மாதிரி நாறி போய் கெடக்கு...! இது சுத்தபடுத்தனும்னு இங்க இருக்கற முப்பத்தியாறு நடிகர்கள்ல யாருக்காச்சும் தோணுச்சா...! என் பொண்டாட்டிக்கு தோணுச்சு..அவதான் சொன்னா..மச்சான் மச்சான் கட்சி ஆரம்பிங்க கழுவுவோம்னு...எதடின்னு கேட்டதுக்கு, நாட்டை மச்சான் நாட்டைன்னு சொன்னா..! எனக்கு பொண்டாட்டி பேச்ச கேக்குறது அறவே புடிக்காது..அதனால இருபது வருசமா கவுட்டி கிழிய கிழிய கால தூக்கி தூக்கி சண்ட போட்டு மொறைச்சு மொறைச்சு பார்த்து சம்பாரிச்ச காசெல்லாம் எறக்கி ஆரம்பிச்சேன் பாரு கட்சிய...!

மெரண்டுட்டா என் பொண்டாட்டி...ஏன் மச்சான் நான் சொல்ற எதையுமே கேக்கமாட்ரீங்கன்னு..! அப்ப சொல்ல ஆரம்பிச்சேன் அவகிட்ட, தமிழ்நாட்ல மொத்தம் இருநூத்தி முப்பத்தி...,அவ அதுக்குள்ள அவ தம்பிகிட்ட போய் சொல்றா, உன்ட்ட அப்பவே சொன்னேன்ல, எனக்கு இந்த கருவாபய வேணாம், லுச்சாதனமா எதுனா பொலம்பிகிட்டே இருக்கானு...கேட்டியான்னு அழுதுகிட்டே பொலம்ப ஆரம்பிச்சிட்டா...! நான் என்ன பண்றதுன்னு தெரியாம போய் தண்ணியடிச்சிட்டு வழக்கம் போல வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டேன்..! அப்ப நெனச்சேன் பொண்டாட்டி கையாள செருப்படி வாங்கற நம்மள மாதிரி ஆம்பளைங்களுக்கு நம்ம கட்சில அடைக்கலம் குடுத்து குவார்டர் வாங்கி குடுக்கனும்னு...! இதோ இப்ப இந்தளவுல வளைந்து நிக்கறேன்...!



இத ஒரு மேடைல சொன்னதுக்கு ஒரு எதிர்க்கட்சி பத்திரிக்கைகாரன் என்ன பார்த்து கேக்றான்..கட்சி ஆரம்பிச்ச சரி..அது என்ன தேசிய முற்போக்கு திராவிடம்..அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுன்னு..? நான் அந்த பத்திரிக்கைகாரன பார்த்து ஒன்னு கேக்றேன்...?

கண்ணு சிவக்க, புருவத்தை தூக்கி தூக்கி முறைச்சு பேசறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா உனக்கு...?

இதுக்கு பதில் சொல்ல சொல்லு அவன..அதுக்கப்றம் நான் அவனுக்கு பதில் சொல்றேன்..தேசிய முற்போக்கு திராவிடம்னா என்னான்னு...! அந்த மடபயகிட்ட நான் ஒன்னு கேக்குறேன்...அர்த்தம் தெரியாமயா என் பொண்டாட்டி அந்த பேர கட்சிக்கு வெக்க சொல்லிருப்பா..! கண்டிப்பா எதாச்சும் அர்த்தம் இருக்கும்..கட்சி ஆரம்பிச்ச புதுசுல என் மச்சான் சுதீஷ் கூட வந்து என்கிட்டே சொன்னாப்ல...கட்சி பேரு செம அர்த்தம் மச்சான்னு...! அப்பறம் எப்டிரா அர்த்தம் இல்லாம போகும் அறிவுகெட்டவனே...! யாருகிட்ட வந்து என்னா கேள்வி கேக்குற..?

எங்க விட்டேன்..ஏய் ச்சீ..அசிங்கமா நெனைக்காதீங்கடா..நான் பேசிகிட்ருந்தப்ப எங்க விட்டேன்னு கேக்குறேன்..

அக்காங்..புடிச்சிட்டேன்..!

அதனால நான் சொல்லிக்கறது ஒன்னே ஒண்ணுதான்..தமிழ்நாட்ல இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதி இருக்கு, அதுல ஒவ்வொரு தொகுதிலயும் முன்னூத்தி பதினைஞ்சு பார்பர் ஷாப் இருக்கு, ஐநூத்தி முப்பத்தி ஆறு டெய்லர் கடை இருக்கு, நானூத்தி எழுபத்தி மூணு மளிகை கடை இருக்கு, அறுபத்தி ஆறு மருந்து கடை இருக்கு,எதுக்கு இந்த கணக்கெல்லாம் இவன் இப்ப சொல்றான்னுதான யோசிக்கற...வேற என்ன சொல்றதுன்னு தெரிலடா எனக்கு..சொல்ல தெரிஞ்சா சொல்லிரமாட்டேன்.. !

அதனால ரொம்பல்லாம் டீட்டைல் கேக்காத..நான் கொலம்பிருவேன்...எனக்கு தேவை இந்த தேர்தல்ல நான் எப்டியாச்சும் ஜெய்ச்சாகனும்..சொன்ன நம்பமாட்ட, இந்த தேர்தல்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு சொல்லி என் பொண்டாட்டியோட தாலி நகை வரைக்கும் வாங்கி அடகு வெச்சிருக்கேன்..இதுல தோத்தேன் ,சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்...அதுலயும் என் மச்சான் சுதீஷ் ரொம்ப மோசம்..கடுப்புல நான் குடிக்கற சரக்குல சயனைட கலந்தாலும் கலந்துருவான்..அதனால தயவு செஞ்சி எனக்கு வோட்டு போடுங்க...நம்ம கட்சி கொள்கை ஜெய்ச்சாகனும்..

என்ன எது நம்ம கொள்கையா...?

சொல்றேன் கேட்டுக்க..,

தமிழ்நாட்ல மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்து முன்னூத்தி நாப்பத்தி நாலு கக்கூஸ் இருக்கு..,

டேய் டேய் இருங்கடா...சொல்லி முடிச்சர்ரண்டா..ஏண்டா எல்லாரும் இப்டி ஓடுறீங்க...?

புரட்சி கலைஞர் விஜயகாந்த்

A article by Rettaivals and Veliyoorkaran.

********************************************************************************

(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICLE



அன்பு உடன்பிறப்பே.,


மு க எழுதுவது..

தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...!

என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே...

நாம் என் செய்ய போகிறோம்..?

நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...!

என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...?

சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?

எப்படி சந்திக்கபோகிறோம் இத்தேர்தலை..மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிபிடிக்கிடையில் எப்படி மாற்ற போகிறோம் வாக்கு பெட்டிகளை..?

ஊழல் கலைஞரின் ஆட்சி முடியபோகிறதென சுடுகாட்டு நரிகளின் ஊளை ஆரம்பித்து விட்டது..மனசை திடமாக்கி கொள்..கண்மணியே...நாம் திராவிடர்கள்...நாம் பார்க்காத தேர்தல்கள் இல்லை..புறப்படு களம் நோக்கி..இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...கயவர்களில் சிலர் காரும்போது சளியும் சேர்ந்து வரும்..மனம் தளராதே...அதையும் துடைத்து ஜோப்பில் வைத்துகொள்...அன்னை தெரசா வழி வந்தவர்கள் நாம்..எச்சிலை துடைத்து எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு கேள்..ஊழல் கட்சியை சேர்ந்த நாயே வெளியே போ என்பார்கள்..விம்மாதே...!

ஆம்.நாம் ஊழல் கட்சிதான்..யார் செய்யவில்லை ஊழல்..உன் தங்க தலைவன் நான் செய்யாத ஊழலா.?..இல்லை என் அன்பு தம்பி கன்னகதுப்பு துரைமுருகன் அடிக்காத காசா..? அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா...என் அவ்ளோ தூரம் செல்கிறாய் என் அன்பு தம்பி..நான் பார்த்து டவுசரை நனைத்து நனைத்து விளையாடிய என் அன்பு பேரன் தயாநிதி அடிக்காத கோடிகளா...? இது அரசியல் தம்பி...நான் செய்வது வியாபாரம்..நாங்களெல்லாம் அடித்த பணத்தை பூசுனாபோல அடித்து பொத்துனாப்ல பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை!..? அந்த திறமை நம் ராசாவிடம் இல்லாதது தான் என் வருத்தமே...யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்..லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..மன்னித்து விடு உடன்பிறப்பே...கோவத்தில் கெட்டவார்த்தைகள் உள்நுழைந்துவிட்டது..!

ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே...காங்கிரஸ் மத்திய சர்க்கார் வரும் சூன் மாத இறுதியில் ஆ .ராசா குற்றமற்றவர் எனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்து அவரை விடுதலையாக்கும்..அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தயாரிக்கப்பட்டு மத்திய சர்க்காருக்கு அனுப்பட்டுவிட்டன...ஆகவே அரசியலில் மாட்டியதுதான் தவறே அன்றி, ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!

கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!

இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.!

இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! கண்டுகொள்ளாதே கண்மணி! நீ இளிச்சவாயன் என்பதை மட்டும் மனதில் நிறுத்து. வீட்டை மறந்து கட்சி பணி செய்! நீ சிந்திக்க ஆரம்பித்தால் நானும் என் குடும்பமும் எங்கேயடா செல்வோம்?

ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்..நான் இறக்கும் தருவாயில் மாநில சர்க்கார் ஒரு மகனிடமும், மத்திய சர்க்கார் ஒரு மகனிடமும் இருக்க வேண்டும்..இதுவல்லவோ உனக்கும் நம் தமிழினத்திற்கும் பெருமை..!

வரலாறு படைத்தவன் நான்..என்னை வாழ வை உடன்பிறப்பே..!

எனக்காக இதை மட்டும் செய் என் உடன்பிறப்பே..எப்போதும் போல, இது நான் உன்னிடம் மன்றாடி கேட்கும் என் இறுதி வேண்டுகோள்..!

நான் சொல்லுவதை எல்லாம் நீ திறம்பட செய்து முடிப்பாய் என எனக்குத்தெரியும் ..உன்னிடம் நான் மனம்திறந்து ஒன்றே ஒன்றை மட்டும் கேட்க வேண்டும்...!

அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?

கலைஞர் மு.கருணாநிதி

திராவிட முன்னேற்ற கழகம்..

--- Written by Veliyoorkaran
****************************************************

அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் - உலகக் கோப்பை 2011




1987 ல் மைக் கேட்டிங் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஆடாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

1996 ல் கல்கத்தா ரசிகர்கள் கலவரம் செய்யாமல் இருந்து காம்ப்ளி காப்பாற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

1999 ல் ஆலன் டொனால்ட் அந்த ஒரு ரன்னை வேகமாக ஓடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?


சில கணங்கள் தான் வாழ்வின் பெரும்பாலான பகுதியை தீர்மானிக்கிறது! கிரிக்கெட் மட்டும் என்ன விதி விலக்கா? கிரிக்கெட்டை Game of Glorious Uncertainties  என்பார்கள்.கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும் அந்த ஒரு கணம் இந்தத் தொடரிலும் நடக்கக் கூடும்.அபிலாஷின் மேலிருந்து கீழ் நோக்கும் அந்த கிரிக்கெட் தேவதையும் தோழிகளும் இந்தியக் கிரிக்கெட்டை ஆசீர்வதிக்கட்டும்.எப்பொழுதும் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்க்கும் தேசப்பற்றுக்கு நிதர்சனம் ஸ்னேகிதமாக இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா.எல்லோரும் ஆரூடம் சொல்கிறார்கள். சிலர் டெக்னிகலாக... சிலர் உள்ளுணர்வின் மூலம்!

ஃபேவரைட்டுகள் சொதப்புவதும் எதிர்பாராமல் கெவின் பிரயன் போன்றவர்கள் ஸ்டார்களாவதும் உலக்கோப்பையில் சகஜம். ஆனால் தனி ஒரு மேட்ச் வின்னரால் மட்டுமே கோப்பையைத் தட்டிகொண்டு வந்துவிட முடியாது! ரசிகர்களின்,மீடியாக்களின் பிரஷர் காரணமாக எந்த ஃபேவரைட் அணியும் சொதப்பத்தான் செய்யும். விதிவிலக்கு ஆஸ்திரேலியா மட்டுமே! 2003 லும் 2007 லும் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் நோக்கிலேயே விளையாடி ஜெயித்தார்கள். அதன் காரணம் அவர்கள் ஜெயிப்பதை ஒரு Habit ஆக வைத்திருந்தது தான். ஆசிய நாடுகளுக்கு அது சுத்தமாகக் கிடையாது. ஒருவேளை அது தான் கிரிக்கெட் ஆசிய நாடுகளில் இவ்வளவு காலூன்றுவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

சமபலத்துடன் நான்கைந்து தேசங்கள் உறுமிக்கொண்டு நிற்கும் வேளையில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்?

மேற்கிந்திய தீவுகள் : டாரன் சாமி துவக்க விழாவில் சிரித்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால் சுற்றுலா வந்த மாதிரிதான் இருந்தது. தோற்றாலும் பிரச்சினை இல்லை என்பதால் எவ்வளவு முன்னேறினாலும் லாபம் தான்.

நியூஸிலாந்து : எல்லா நல்ல பிளேயர்கள் இருந்தும் ஏன் தோற்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. வெட்டோரி ஒரு அதிரடி கேப்டன் கிடையாது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.கேப்டன் எவ்வழி பிளேயர்கள் அவ்வழி!

தென் ஆப்பிரிக்கா : இவர்கள் அதிர்ஷ்டத்துக்கு வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் இறங்கி அதனால் டக் வொர்த் முறையில் வெளியேறினால் கூட ஆச்சர்யமில்லை. அப்படி ஒரு அதிர்ஷ்டக் கட்டைகள். ஸ்பின்னர்களுக்கு பயந்து நடுங்காத பட்சத்தில் இறுதி வரை முன்னேறக் கூடும்.

இங்கிலாந்து : இந்த அணியை பொறுத்த வரையில் ரெண்டே விஷயம் தான். இவர்கள் இரண்டு தப்பு செய்தால் தோற்றுவிடுவார்கள். எதிர் அணியினரை இரண்டு தப்பு செய்ய வைத்தால் ஜெயிப்பார்கள். நெருக்கடியை சமாளிப்பதில் பிரிட்டிஷ் வீரர்கள் ஒன்றும் சம்ர்த்தர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைப் போல கடைசி வரை ஒரு கை பார்த்து விடுவது என்ற மனோ திடத்தில் இங்கிலாந்து ஆடினால், கோப்பை கைகூடும்.

ஆஸ்திரேலியா : எல்லோராலும் இந்த முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள அணி. 87 லும் , 99 லும் இவர்கள் ஒன்றும் ஃபேவரைட் கிடையாது என்பதை கவனிக்கவும்.ஆனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

இலங்கை : பேட்டிங்கில் ஸ்ட்ராங்.பவுலிங்கிலும் ஸ்ட்ராங். பழைய இந்திய அணியினர் போல் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தும் கணிக்க முடியாத அணி. பாகிஸ்தானுடன் விளையாடியதைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.அதிகபட்சம் செமிஃபைனல்ஸ்.

இந்தியா : நிறைய எதிர்பார்ப்புகள். தோனியின் மீது கூடுதல் சுமை. யூசுஃப் பதானை முன்னால் இறக்கி விட்டு தோனி பின்னால் இறங்கினால் உத்தமமாக இருக்கும். ஆஸ்திரேலிய , இலங்கை வீரர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஹர்பஜனை கழட்டிவிட்டு அஸ்வினுக்கு வாய்ப்பளித்தால் மாஜிக்குகள் எதிர்பார்க்கலாம்.

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்பின்னர்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு ஸ்லாக் விக்கெட்டுகளைக் கழட்டுவதில்தான் முக்கியப் பங்கு இருக்கும். ஆனால் விதியை வெல்ல பார்ட்னர்ஷிப் பிரேக்கர்கள் தேவை. மிதவேகப் பந்து வீச்சைப் பற்றி யாரும் கவலைப்பட்டாற்போல் தெரியவில்லை.

மிகவும் மெதுவாக எழும்பும் பிட்சுகள் கொண்ட இந்தியாவில் நிலைத்து ஆடுவது மிகவும் சுலபம். அதை உடைப்பது 30-40 ஒவர்களில் வீசும் பவுலர்களிடம் தான் உள்ளது. அதற்கு ஆல் ரவுண்டர்கள் தேவை. நாம் அதைப் பற்றியும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இர்ஃபான் பதான் இருந்திருந்தால் நமது அணி சற்று வலுவாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலும் கோப்பையை வெல்வதற்கு கேப்டன் கூலாக இருந்தால் மட்டும் போதாது. வெறி வேண்டும். லீக் ஆட்டங்களிலும் சாம்பியன் போல் ஆடும் அணி தான் இறுதிப் போட்டி வரை வரும். 2003 ல் ஆடிய இந்திய அணி முதல் மேட்சை தவிர்த்து எல்லா ஆட்டங்களிலும் சாம்பியன் போலவே ஆடியது. ஆனால் கங்குலியிடம் இருந்த வெறியை விட ரிக்கி பான்டிங்கிடம் இருந்த வெறி அதிகம். அதனால் தான் அவர்களால் கோப்பையை தொடர்ந்து கைப்பற்ற முடிந்திருக்கிறது.

இது வரை சாம்பியன் ஆன எந்த அணியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிறைந்திருப்பார்கள். 83 ல் இந்தியா..92 ல் பாகிஸ்தான்... 96 ல் இலங்கை என ஆசிய நாடுகள் ஜெயித்த எந்த வெற்றி அணியிலும் ஆல்ரவுண்டர்களின் பங்கு கணிசமாக இருந்திருக்கும்.அதே போல் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் கோப்பையை வெல்லும் எந்த அணியும் அந்தத் தொடரில் தான் ஃபார்முக்கு வரும்.அல்லது உலகத்தொடரின் முந்தைய போட்டிகளில் ஃபார்முக்கு வரும். 83 ல் இந்தியா வெஸ்ட் இண்டீஸின் சுற்றுபயணத்தில் அசத்திய கையோடு கோப்பையைத் தட்டிச் சென்றது. 96 ல் இலங்கை அந்தத் தொடருக்கு முன் தான் ஃபார்ம் ஆக ஆரம்பித்தது.99 உலகக்கோப்பையில் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்கு மேலாக தனது ஆட்டத்திறனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இந்த உலகக்கோப்பையில் ஒரு அணி தற்பொழுதுதான் ஃபார்முக்கு வர ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள காதலில் தேசப்பற்றை சற்று மூலையில் அமர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் அந்த அணிதான்  என்னோட ஃபேவரைட்டும்.





அந்த அணி - பாகிஸ்தான்!

************************************************************************************

அ இ அ தே மு தி ம மு க...?




"என்றுச் சொன்னால் மிகையாகாது ... என்று முடிக்காமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஜனநாயகமான வீராவேசப் பேச்சுக்களை ஒலிப்பெருக்கிகள் அலற ஆரம்பித்துவிடும். புது ரோடு , புது நோட்டு, புது சரக்கு ..கலக்கறே தமிழா என்று விண்ணவர் கூட வியந்து போற்றும் அளவுக்கு இனிமேல் செழிப்பு ஜாஸ்தி ஆகிவிடும். பணப்புழக்கம் எகிறும். கதர்களும் கரைவேட்டிகளும் நம்மை கொஞ்ச காலத்துக்கேனும் எஜமானர்களாக பாவிக்கும். திறந்த ஜீப்பில் முன்பின் அறிமுகமல்லாத ஒருவர் கைவலிக்கக் கும்பிடு போட்டுக்கொண்டே வருவார். கட்சிதாவல்களும் அணிமாற்றங்களும் சகஜமாகும். ஆனந்தவிகடன் போட்டி நடத்தும்.ஞாநி 49 ஓ போடுங்கள் என்பார்.

நிற்க!

இதெல்லாம் எல்லாத் தேர்தல்களிலும் நடப்பது தானே என்று தோணக்கூடும். ஆனால் பவர்கட்,விலைவாசி புண்ணியத்தில் இருப்பது மௌனமான எதிர்ப்பு அலையா அல்லது அரிசி இலவசங்கள் புண்ணியத்தில் ஆதரவு அலை அடிக்கிறதா என கணிக்க முடியாத குழப்பமான தேர்தல் இது. ஆனால் ஒன்று நிச்சயம்.இதுவரை யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள் என்பதை வைத்து ஓரளவுக்கு வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக யார் யாரோடு சேராமல் இருக்கிறார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது இந்த முறை வெற்றியின் சூட்சுமம்.

2006 தேர்தல்:-

திமுக+காங்+பாமக+கம்யூ முறையே வாங்கிய ஓட்டு சதவீதம் 26.4+8.38+5.55+4.24 என மொத்தத்தில் 44.57 % வாக்குகள். வென்ற தொகுதிகள் = 163
அதிமுக+மதிமுக+வி.சி+ஜனதா(எஸ்) வாங்கிய ஓட்டு சதவீதம் 32.52+5.97+1.29+0.07 என மொத்தம் 39.85 % வாக்குகள்.வென்ற தொகுதிகள் = 69.
விஜயகாந்த் பெற்றது 8.32 சதவீதம்.வென்ற தொகுதி 1. சுயேச்சை 1 தொகுதி(3.01%)

இதில் திமுக+காங் மற்றும் அதிமுக+மதிமுக கட்சிகள் மட்டுமே தங்கள் கூட்டணியை முறிக்காத கட்சிகள்.

அதிமுக 2001ல் (31.44) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 1.08 % அதிகம் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

திமுக 2001ல் (30.92) பெற்ற சதவீதத்தைக்காட்டிலும் 2006ல் 4.52 % குறைவாகப் பெற்று ஆட்சி அமைத்தது. இது தான் நம் ஜனநாயகத்தின் விசித்திரமும் கேடும். இந்த விசித்திரத்துக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப் படுவது விஜயகாந்த் பெற்ற 8.32 % ஒரு காரணமென்றாலும் காங்கிரஸ் 2001ஐ (2.48%) காட்டிலும் 2006ல் பெற்ற 8.38 % வாக்குகள் அதி முக்கியமானவை. ஆனால் அவர்களால் மந்திரி சபையில் இடம்பெற முடியாது.ஏன் ஆசைப்படக் கூட முடியாது. இது தான் விசித்திரம். ஜெயித்தும் பலனில்லாமல் வெறுமனே அறிக்கைகள் கொடுப்பது எவ்வளவு கொடுமை.??

தேமுதிகவுக்கு சென்ற முறை விழுந்த வாக்குகள் அனைத்தும் தனியாக நின்ற தைரியத்துக்கும் திமுகவுக்கு எதிராக, ஆனால் அதிமுகவையும் பிடிக்காமல் விழுந்த வாக்குகள். இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த சதவீதம் பெருமளவு சிதறிப்போகும். அது யாருக்குப் போகும் என்பது தெரியாமல் தான் எல்லோருக்கும் தலை சுற்றுகிறது.

தி.மு.க

2ஜி விஷயத்தில் அடி வாங்கி இருக்கும் இமேஜை சரி கட்ட மேலும் மேலும் இலவசங்களை அள்ளிக்கொட்டக் கூடும். நிச்சயம் தாய்மார்களை கவரும் ஏதோ ஒன்று.அநேகமாக கிரைண்டர் அல்லது செல்ஃபோனாக இருக்கலாம்(எவன் அப்பன் வீட்டு சொத்து). ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தும் பட்சத்தில் அழகிரி தென்மாவட்டங்களில் தன் கைவரிசையை காட்டக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் வேண்டப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு சீட் கொடுத்தாலெ 150 சீடுக்கு மேல் வந்துவிடும். அப்புறம் கட்சிக்காரர்களுக்கு ? விடுங்கள் ...கழகமே குடும்பம், குடும்பமே கழகம்!!! பேராசிரியர், ஆற்காட்டார் எல்லாம் வி.ஆர்.எஸ் வாங்கிகொள்வது நல்லது.இது என் கடைசி தேர்தல் என்கிற சென்டிமென்ட் சீன் வேலைக்கு ஆகாது தலைவரே! போன முறை கடைசி அஸ்திரமாக இலவசத்தை அள்ளிவிட்டது போல் ஏதாவது இண்டிரஸ்டிங்காக யோசியுங்கள்!

அ.தி.மு.க

இது வாழ்வா சாவா பிரச்சினை . இந்த முறை ஜெயிக்காவிட்டால் கட்சியில் ஜெ.வையும் சசிகலாவையும் தவிர எல்லோரும் தி,மு.கழகத்தில் சேர்ந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.(ராசாவிடம் தமிழ்நாட்டையே வாங்கும் அளவுக்கு பைசா இருக்கும் போல...கேவலம் ஒரு கட்சியை வாங்குவதா கஷ்டம்?). கடந்த ஆட்சியின் போது கொடுத்த கசப்பான மருந்துகளெல்லாம் மக்கள் மறந்துவிட்டது ஒரு நல்ல விஷயம்.ஆனால் இன்னும் ஜெயா டி.வி யில் ரபி பெர்னார்ட் ஒவ்வொரு மாவட்டச் செயலாலர்களையும் கருணாநிதியை திட்டவைத்து பேட்டி எடுக்கவைத்துக் கொண்டிருந்தால் தேறுவது கஷ்டம். மக்களுக்குப் புரியவைப்பதற்கும் போராடுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.விலைவாசியை விட அற்புதமான ஆயுதம் ஏது? காங்கிரஸ் கை கழுவி விட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை விஜயகாந்த் சரிக்கட்டக்கூடும். தடாலடியாக முடிவெடுப்பது சில சமயம் நல்லதுதான். ஆனால் அதுவே ஒரு பத்துவருஷம் பத்திய சாப்பாடு போட்டுதுன்னா...மேடம் யோசிக்கணும்!

பா.ம.க:

ராமதாஸ் எந்த கூட்டணியில் இருக்கிறார் என மக்கள் டி.விக்கே தெரியவில்லை.அவரது கட்சிக்காரர்களிடம் கேட்டால் அன்புமணிக்கே தெரியலைன்னு பதில் வருகிறது. அன்புமணியிடம் கேட்டால் ராமதாஸுக்கே தெரியாது என்பார். ஒரு ராஜ்ய சபா சீட்டும் சுகாதார மந்திரி பதவி கொடுத்தால் முஷரஃப், ஷேக் ஹசீனா, ஏன் புரூனே சுல்தானிடம் கூட கூட்டணி வைத்துக்கொள்வார். கேட்டு வாங்கும் இடத்திலிருந்து கொடுத்ததை வாங்கிகொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதும் ஆங் அதென்ன ..காலத்தின் கட்டாயம்.

மதிமுக :

ராமதாஸுக்காவது அன்பு மணி ராஜ்யசபா மந்திரிபதவி என்று அரசியல் செய்ய ஒரு காரணம் இருக்கும். ஆனால் வைகோவுக்கு எதற்காக அரசியல் செய்கிறோம் எதை வைத்து அரசியல் செய்வது என்பதை கண்டுபிடிக்கவே பெரும்பாடாக இருக்கும்.அண்ணனைப் பொறுத்தவரை அம்மா எவளவு சீட் கொடுத்தாலும் அது போனஸ் தான்.இரட்டை இலை சின்னத்திலேயே நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சரி ஏன் திடீரென்று ஜனநாயகத்தின் மேல் இவ்வளவு கரிசனம் என்று கேட்கலாம்? இருக்கிறது. ஓட்டுப்போடாவிட்டால் உறுத்தும். ஓட்டுப்போட்டால் மனசாட்சி எட்டிநின்று கை கொட்டி சிரிக்கும்.

திமுக+காங்கிரஸுக்குக்கு ஓட்டுப்போட்டால் எப்படியும் கைசெலவுக்கே வழிப்பறி தான் செய்யவேண்டும். அதிமுக அன்ட் கோவுக்குப் போட்டால் கோபத்தில் அரசு ஊழியர்களோடு தனியார் கம்பேனி ஊழியர்களையும் சேர்த்து டெஸ்மா எஸ்மா என்று போட்டால் புழல் என்ன கொடைக்கானலா? சத்தியமாக தாங்க முடியாது. பிரேமலதா விஜயகாந்த் மீட்டிங்கில் பிளிறுவதைப் பார்த்தால் "எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க...அப்புறம் பாருங்க எவ்வளோ சுருட்டிக் காண்பிக்கிறோம்னு " என்று சவால் விடுவதைப்போல் உள்ளது. 49 ஓ போடலாமென்று பார்த்தால் அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. இங்கு இருப்பது ஒரே கட்சி தான். அதன் பெயர் அகில இந்திய அண்ணா தேசிய முற்போக்கு திராவிட மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம்.

அதனால் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.

என்னவா?

என் ஓட்டை எனக்கே போட்டுவிடுவது என்று. அதான் பாஸ் ! இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்கணும்னா இதான் ஒரே வழி! நானும் எலெக்ஷன் ல நின்னுடலாம்னு பார்க்கறேன்.

என்ன பார்க்கிறீர்கள் ?

நாம் தான்  இந்நாட்டு மன்னர்களாயிற்றே!