RSS

(மானங்கெட்ட) உடன் பிறப்பே :பார்ட் II



(மானங்கெட்ட)  உடன்பிறப்பே !



ஆசையில் ஓர் கடிதம்...என் உடலும்என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள்..நின்னின் நலம் விழைய அவா...! உன் அன்பிற்கும் ஆசைக்கும் உரிய நெஞ்சத்திற்கு என் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்..!..! 

தமிழ் இணையத்தில் சில நாட்களாய்என் இதயத்து உடன்பிறப்புக்கள் தாக்கப்படுவதாய் சிறுகுறிப்பொன்று என் மேஜைக்கு வரக்கண்டேன்..துணுக்குற்றேன்...திடுக்கிட்டு போனேன்...!! திமுக தொண்டன் தாக்க வேண்டியவனே அன்றிதாக்கப்பட வேண்டியவன் அல்லவேஎன என் மனம் வெம்பி  பதறியது கண்டேன்..உனக்கொன்று சொல்வேன் நான்...கேட்டுகொள் உடன்பிறப்பே..!

நம்மை போன்ற நயவஞ்சகர்களுக்கு நாவடக்கம் முக்கியம் என்பதை மனதில் நிறுத்து ...கோவத்தை குறைத்துக் கொள்..!இணையத்தில் வார்த்தைகளை கட்டுக்குள் வை..உணர்ச்சிவசபடாதே...!! திராவிட முன்னேற்ற கழகம் மனிதம் உள்ளவர்களால் நிறுவப்பட்டு என்னை போல் மூளை உள்ளவர்களால் வளர்க்கப்பட்டு உன்னை போல் சிந்திக்கும் திறன் குறைந்த உணர்ச்சிமிகு தொண்டர்களின் உழைப்பில் வலுபெற்ற மாபெரும் இயக்கம் என்பதை வரலாற்றிடம் கேட்டறிந்து கொள்...இது வரலாறு திரும்பும் நேரம்...! இணையத்தில் கழகத்திற்காக சிறப்பாக செயலாற்று...அடுத்தவர்களுக்கு சிரிப்பு வர செயலாற்றாதே...!!..!

நாம் என்றைக்கு ஒரு பிரச்சினையை தீர்த்திருக்கிறோம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு பிரச்சினையை இழுத்துவிடுவது தானே நம் வழக்கம். நிலத்தை அபகரிக்கிறோம் என்று குற்றச்சாட்டுகள்..நிலத்தை நாம் எங்கே அபகரித்தோம்..அது அங்கேயே தானே இருக்கிறது. ஜனங்கள் முன்பு போல் இல்லையடா கண்ணே! நாம் கொடுத்த டி.வி யில் நியூஸ் பார்த்து நமக்கே ஆப்பு வைக்கிறார்கள்.நம் இயக்கத்தையும் என்னையும் பற்றி இணையத்தில் பிரச்சனைகள் எழும்போது அதை மறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிடுவதுதான் ராஜதந்திரம் என்பதை புரிந்துகொள்...என்னை ஏசும் வீணர்கள்..கிராதகர்கள்..என் தமிழ் கேட்காதவர்கள்...என்னை புரிந்து கொண்ட ஈன பிறவிகள்...என்னை அப்படிதான் தூற்றுவார்கள்...நீ அவர்களிடத்தே உன் காதை குடுக்காதே...அவர்கள் என் தொடர்பாய் ஒரு பிரச்சனையை கிளப்பிவிடுவார்களாயின்,நீ அதற்க்கு சற்றும் தொடர்பில்லாத மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிடு...அவர்கள் கவனத்தை சிதற வை..ஈழம் அழிந்துகொண்டிருக்கும்போது கைகட்டி வாய் பொத்தி அமைதியாய் வேடிக்கை பார்த்தவன் நான்..இப்போது எதற்கு டெசோவை பற்றி பேச வேண்டும்..யோசித்து பார் உடன்பிறப்பே...அரசியல் சூட்சுமம் பயில்...! தனி ஈழமோ தனித் தமிழ்நாடோ..நம் கவனத்தை கல்லாவில் வை!

திராவிடம் பேசு..ஆனால்சத்தமில்லாமல் பேசு..திமுக காரன் என உரக்க சொல்லாதே... நம் கழக தலைவர்களின் தற்போதைய நிலை தமிழகத்திலே என் தெரியுமா உனக்கு...! கொன்னு கைய கட்டி புதர்ல தூக்கி போட்ருவாங்கே..ஆனாகொன்னவன் கெடைக்க மாட்டான்..!! அப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நமக்கு...இப்ப போய் எங்கனா வாய குடுத்து மாட்டிக்காத..! 
முடிந்தவரைக்கும் இணையத்திலேயே போராடு. நடு வீதிக்கு வந்து போராடினால் நடு மண்டையிலேயே நச்சென்று கொட்டுவார்கள். நீ இளிச்சவாயந்தான். எத்தனை வருசமாதான் நீயும் வாய் பர்த்துட்டே உக்காந்திருப்ப. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் தான் இருக்கிறது. ஆனால் உனக்கே தெரியும், என் குடும்பத்திலேயே அதை விட அதிகமாக சீட் கேட்பார்கள் என்று. அதனால் தான் தமிழீழம் கேட்டு டெசோ ஆரம்பித்திருக்கிறேன்.அது இது எது புரோகிராமில் சிரிக்காதவர்கள் கூட இதைக் கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்து நம்மை ஏளனப் படுத்துகிறார்கள். ஆனால் நாம் காரியவாதிகள்.

அன்று அண்ணாவின் போர்வாள் என அழைக்கபட்டவன் நான்...ஆனால் இன்றுதமிழகத்து தாய்மார்கள் ஊழல் பெருச்சாளி தாத்தா என எனை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டும் அவல நிலை...!  

என் மூத்த மகன் அழகிரி..அன்பானவன்...ஆவேசம் மிகுந்தவன்..ஆத்திரக்காரன்.. சிறுவயதில் அவன் தின்பண்டங்கள் வாங்கி கேட்டு நான் குடுக்கவில்லையே ஆயின் என் மடியில் ஏறி உட்கார்ந்து என் மூக்கில் குத்தி வாங்கி கேட்பான்..பெத்த மனம் மகிழ்ச்சியில் திளைத்த தருணங்களவை...!! ஆனா தறுதலைப்பய மவன் இப்பவும் அதே மாதிரி கேட்டால் என்ன செய்வது?

மற்றொரு புறம் என் ஆசை மகன் ஸ்டாலின்...!

அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்! எதற்கு என்று கேட்காதே... அதுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான். சந்தேகமாக இருந்ததால் ஸ்டாலினும் தயாளு, அன்பழகன் ஏன் குஷ்புகிட்ட கூட கேட்டுப் பார்த்தான் " நான் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்?" என்று.
எல்லோரும் நான் நினைப்பதையே சொல்லி இருக்கிறார்கள்..." அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்"னு. நான் எதுக்குடா சரிப்பட்டு வர மாட்டேன் என்று கேட்பதற்காக தமிழ்நாடு முழுக்க வந்து கேட்பான். நீங்களும் " நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய்!" என்று சொல்லிவிடுங்கள். அறுபது வயதில் இளைஞரணிக்கு ஆள் சேர்ப்பதில் உள்ள கஷ்டம் அவனுக்கு!

இவர்களிருவரும் ஒரு புறம்..மற்றொரு புறம் என் ஆசை மகள் கனிமொழி...! கழகத்திற்கு அழிக்கமுடியா கறையை உருவாக்கிய என் அன்பு மகள்..! தேசிய அரசியலில் ஒரு முக்கிய தலைவரான என்னை காங்கிரஸ் மேலிடம் ஒரு கட்டண கழிவறை காப்பாளரை போல் மதிப்பதற்கு முக்கிய காரணம் என் செல்ல மகள் கனிமொழி...! வெறுமனே சிபிஐ என போட்டு வீட்டிற்கு ஒரு அஞ்சல் அட்டை வந்தால் கூட டெல்லியை அழைத்து என் மகளை விட்ருங்கம்மான்னு அன்னை சோனியா காந்தியை நான் கெஞ்சி கதறுவதற்கு காரனமானவளும் இவளே...! இவள் மேல் படிந்த ஊழல் கரைகளுக்கு இவளில்லை காரணம் ! நானே காரணம்..! தக்காளி அன்னிக்கே கொஞ்சம் கண்ட்ரோலா இருந்துருக்கலாம்..!!

என்னிடம் சொல்வதற்கு உனக்கு ஆயிரம் இருக்கலாம்.அதையெல்லாம் கேட்டிருந்தால் என் நிலைமை ஏன் இப்படி இருக்கப் போகிறது?
ஆனால் என்னிடம் ஒரு வரி உண்டு உனக்கு...!

மக்களுக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கறவன் தக்காளி புள்ள குட்டி பெத்துக்காதீங்கடா டேய்..!

******************************************************************************************

Article by Veliyoorkaran and Rettaival's

தமிழ்மகனின் "ஆண்பால் - பெண்பால்" -


"ஐ லவ் யூ" என்கிற பிரயோகத்தை ஒரு ஆண் சொல்வதற்கும் ஒரு பெண் சொல்வதற்கும் எத்தனை வேறுபாடுகள்? சுகம், துக்கம், சந்தோஷம், மரணம் என வாழ்வின் அத்தனை கூறுகளையும் ஓர் ஆண் எதிர்கொள்வதற்கும் அதையே ஒரு பெண் எதிர்கொள்வதற்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள். அதுவும் மனப்பிறழ்வு போன்ற அதிகம் அறியப்படாத ஒரு சிக்கலை பால்பாற் சிந்தனைகளை "ஆண்பால் பெண்பால் " என்கிற நாவலாக ரசனையான நடையில் தந்திருக்கிறார் தமிழ் மகன்.


கனவுகளோடு ஆரம்பிக்கும் ஒரு தாம்பத்யம். நடுவில் எம்.ஜி.ஆர் புகுந்து குட்டையை குழப்பி விடுகிறார். கேட்கவே ஜோராக இருக்கும் இந்த இழை சுவாரஸ்யம் குறையாமல் ஒரு அழகான திரைக்கதையின் நேர்த்தியோடு பயணிக்கிறது , கடைசிக்கு முந்தைய அத்தியாயம் வரை. முடிவில் ஒரு திகைக்கவைக்கும் திருப்பம்.தலையணை சைஸ் புத்தகங்களுக்கு மத்தியில் இருநூற்றி சொச்சம் பக்கங்களில் கைக்கு அடக்கமாக கச்சிதமாக ரகளையாக ஒரு நாவல்.

இந்தக்கதையை பிரியா சொல்வதாக டாக்டர் பிரமீளாவும் அருண் சொல்வதாக ரகுவும் எழுதுகிறார்கள்.

அருண் - பிரியா புது மண தம்பதிகள். பிரியா தனியார் ஆவணக் காப்பகத்தில் வேலை பார்க்கிறாள்.பிரியாவின் தந்தை தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்து பின்னர் வாழ்க்கையின் நீரோட்டத்தில் கலந்து விட்ட அந்த தலைமுறை பிரதிநிதி. அருண் எம்.ஜி.ஆர் பற்றியெல்லாம் அவ்வளவாக அறிந்திராத அக்கறைப்படாத ஒரு சராசரி. ஆர்வமுடன் இல்லறத்தை எதிர்நோக்கும் போது எம்.ஜி.ஆர் சூட்சும ரூபத்தில் வில்லனாக நுழைகிறார். அதாவது பிரியா தன்னுள் எம்.ஜி.ஆர் ஆவி நுழைந்து விட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறாள். மனப்பிறழ்வின் ஆரம்பத்தில் இருக்கும் பிரியா வியாதியின் அடர்த்தி ஏற ஏற தன்னை முழுவதுமாக எம்.ஜி.ஆரிடம் ஒப்படைத்து விடுகிறாள்.எம்.ஜி.ஆர் தன் மூலம் குழந்தையின்மை எனும் நிராசையை நிவர்த்தி செய்ய முயல்வதாக நம்புகிறாள். அருணுக்கு முதலில் சிறுபிள்ளைத்தனமாக தெரியும் இந்த விஷயம் மெல்ல மெல்ல அதன் வீர்யம் புரிபட ஆரம்பித்ததும் அதிர்கிறான்.

பிரியாவின் தந்தை எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தது மட்டும் அவளின் ரோகத்துக்குக் காரணமில்லை, அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளிடம் எம்.ஜி.ஆரை கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும் என யூகிக்கிறான். அது என்னவென்று தெரிய வரும்போது மொத்தக் கதையின் தன்மையுமே மாறிவிடுகிறது.மாத்திரை மருத்துவம் என எதுவும் பலனளிக்காத நிலையில் குடும்ப நீதி மன்றம் அருணை பிரியாவிடம் இருந்து விடுவிக்கிறது. மனநல நோயாளிகளின் அவஸ்தையையும், விவாகரத்துகள் கேள்விக்குள்ளாக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையான விசாரத்தோடு முடிகிறது நாவல்.

கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.

1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு -  வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.

2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ் மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், மயிலாப்பூரில் அவருக்காக தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள். ஆனால் என்னதான் பிரியா எம்.ஜி.ஆரை Godly பிம்பமாகப் பார்த்தாலும் எம்.ஜி.ஆரைப் பற்றிய நெகட்டிவ் சமாசாரங்கள் தான் அதிகம் இருப்பதாகப் படுகிறது. தமிழ் மகனும் அதைத் தான் விரும்பியிருக்கிறாரோ என்னவோ?

ஒரு முழு தலைமுறை கடந்துவிட்ட பிறகும் எம்.ஜி.ஆர் எனும் பிம்பம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆய்வுக்குரியது. அவரை கடவுளாகவோ,ஓட்டு வங்கியாகவோ அல்லது சினிமா எனும் மயக்கமருந்தை சரியான கலவையில் தெளித்து ஒரு பெருங்கூட்டத்தை சிந்திக்கவிடாமல் செய்து ஆட்சியைப் பிடித்த ஒரு தந்திரவாதியாகவோ பார்க்காமல் அவரை அசலாகப் பார்க்க முயற்சி செய்யத் தூண்டியது இந்நாவலின் வெற்றி.

குழப்பமான முன்னுரையை தவிர்த்திருக்கலாம். அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாகவும் இல்லை. நாவலே வித்தியாசமாக இருக்கும் பொழுது வாசகனின் கவன ஈர்ப்புக்கு வேறெதுவும் தேவை இல்லை. கடைசி அத்தியாயம் வரை மெலிதாக புன்னகைத்துக் கொண்டே வாசிக்கத்தூண்டும் ஒரு வித்தியாசமான கதை - "ஆண்பால் பெண்பால்".

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

அழகிய சினிமா – MIDNIGHT IN PARIS (2011)



உங்களுக்கு சென்னையில் கடற்கரை சாலை பிடிக்குமா? அதுவும் லேசான மழையில் நனைந்துகொண்டே நடக்கப் பிடிக்குமெனில் இந்தத் திரைப்படம் உங்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடும். அப்படிப்பட்ட ரசனை மிக்க ஒரு திரைக்கதையாளனின் காலப் பயணம் தான் மிட்நைட் இன் பாரீஸ்.சில கதைகள் தானே திரைக்கதையை எழுதிக்கொண்டு விடும். வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் "Midnight in paris" அத்தகைய ஒரு இலக்கியம் சார்ந்த ஃபேண்டஸி சித்திரம்.

கில் பெண்டெர் ஒரு ஹாலிவுட் எழுத்தாளன். தனது கனவு நாவலை முடிக்க முடியாமல் திணறும் தருவாயில் தனது Fiancee உடனும் அவளது பெற்றோருடனும் பாரீஸ் செல்ல நேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் பாரீஸ் அவனை ஈர்த்துவிடுகிறது. நகரத்தை அதன் போக்கில் சென்று ரசிக்க விரும்பும் கலா ரசனாவாதி. ஆனால் இவனது காதலியின் குடும்பம் சற்றே போலித்தனத்துடனும் பணக்காரத்தனத்துடனும் வாழும் ஆடம்பரவாதிகள். இரவு அவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் அந்நியப்பட்டு தனியே காலாற நடக்கிறான். சரியாகப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் இவனருகில் வந்து நிற்கிறது.


அது ஒரு பழைய கார். 1920களின் பாணியில் உடையணிந்த மனிதர்கள். கில்லை காரில் ஏறுமாறு வற்புறுத்தி அழைத்துப் போகிறார்கள் 1920களுக்கு.

அங்கே ஆச்சர்யம் கொட்டிக் கிடக்கிறது. அது பாரீஸின் பப்களிலும் பார்களிலும் கவிதை இலக்கியம் என கரை புரண்டு ஓடிய காலம். கில் பெண்டெரின் ஆதர்ச எழுத்தாளர்களும் ஓவியர்களும் வாழ்ந்த காலம். திகைத்திருக்கும் கில்லிடம் ஹெமிங்வேயை அறிமுகம் செய்து வைக்கின்றனர். நம்பமுடியாமல் திணறுகிறான். நீ என்ன எழுதுகிறாய் என ஹெமிங்வே கேட்கிறார். நாஸ்டால்ஜியா ஷாப் வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய கதை என்று கில் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு கிர்ட்ரூட் ஸ்டெய்னை (எழுத்தாளினி,விமர்சகர்) அறிமுகபப்டுத்தி வைப்பதாக கூறுகிறார்.ஆச்சர்யத்தின் உச்சியில் இருக்கும் கில் ஹோட்டலுக்குப் போய் நாவலின் பிரதியை எடுத்து வரப் போகிறான். வெளியே வந்து பார்த்தால் மீண்டும் 2010.

மறுநாளும் அதே வகையான அனுபவங்கள். இந்த முறை சந்திப்பது பாப்லோ பிகாஸோவை. பிகாஸோவின் காதலி ஆடிரியானாவுக்கு கில்லை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போக காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதே சமயம் பகலில் நிகழ்காலத்தில் விரும்பும் காதலியுடன் மனது ஒத்துப் போக மறுக்கிறது. அவளுக்கும் இவன் பேரில் சந்தேகம் வர கில்லை ஒரு மாதிரியாக நினைத்து ஒதுங்க ஆரம்பிக்கிறாள். பகலிலும் தனியாளாக பாரீஸை சுற்ற ஆரம்பிக்கிறான்.

ஒரு பழைய புத்தகக் கடையில் புஸ்தகங்களை மேய்கையில் 1920ல் சந்தித்த ஆட்ரியானாவின் டைரி கிடைக்கிறது. அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளரை சந்தித்ததாகவும் அவனை காதலித்ததாகவும் எழுதியிருக்கிறாள்.பரவசமாகி விடுகிறான் கில். இரவு அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்று இரவு மீண்டும் தன் பொற்காலத்துக்கு செல்கிறான்.

கில்லும் ஆட்ரியானாவும் முத்தத்தைப் பரிமாறியபடி பாரீஸ் வீதிகளில் நடக்கும்போது ஒரு குதிரை வண்டி வருகிறது. அவர்கள் இருவரையும் ஏற்றியபடி குதிரை வண்டி செல்வது 1890களுக்கு, கில்லுக்கு தலை சுற்றுகிறது. ஆட்ரியானா, பௌல் காகின் எட்கர் டேகா போன்றவர்கள் வாழும் இது தான் தன் பொற்காலம் எனவும், இங்கேயே தங்கி விடலாம் என வற்புறுத்துகிறாள். ஆனால் 1890களில் வாழும் இலக்கியவாதிகள் ரினைஸான்ஸ் காலமே உண்மையான பொற்காலம் என கருதுகின்றனர். கில் பெண்டருக்கு உண்மை புரிகிறது.

தான் வாழும் காலத்தை விட தன்னுடைய நினைவில் பதிந்திருக்கும் ஆதர்சமான காலம் தான் அனைவருக்கும் ப்ரியம் தருகிறது என்று உணருகிறான். மீண்டும் 2010 க்கே வந்து விடுகிறான்.

இப்பொழுதும் இந்த நள்ளிரவிலும் பாரீஸில் லேசான மழை பெய்கிறது.கில் பென்டெர் நனைந்தபடியே நகரத்தின் அழகை வியந்தபடியே நடக்க ஆரம்பிக்கிறான்.அப்பொழுது அந்தப் பெண் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். அவள் யார் என்பதை திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கில் பெண்டராக ஓவன் வில்சன்.வூடி ஆலனை அப்படியே மறுபிரதியாக பார்ப்பது போல் உள்ளது.கண்களில் ஆச்சர்யமும் ஆர்வமும் கொப்புளிக்கும் அற்புதமான நடிப்பு. கிறங்கடிக்கும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என பாரீஸின் தரமான பக்கத்தை காட்டும் திரைப்படம். இவ்வளவு இலக்கிய வாடை அடிக்கும் படத்தில் இலக்கிய விசாரங்களுக்குக் கேட்கவா வேண்டும். வசனத்தில் பின்னி எடுத்திருக்கிறார் வூடி ஆலன். மிகையில்லாத ஃபேண்டஸி காட்சிகள் , அதே நேரத்தில் வெறும் காரில் ஏறுவதிலேயே காலத்துக்குள் பிரயாணம் செய்யவைக்கும் வித்தை என அசத்தியிருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் வந்த இலக்கியவாதிகளின் கோபம்,விமர்சனம் அழகியல் குறித்த பார்வை பல்வேறு நுணுக்கங்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் காதல்,ரசனை, பரவசம், ஆதர்சம் என எல்லாவிதத்திலும் – Midnight in Paris - மயங்கவைக்கும் ஒரு இலக்கிய சினிமா!