RSS

அழகிய சினிமா – MIDNIGHT IN PARIS (2011)



உங்களுக்கு சென்னையில் கடற்கரை சாலை பிடிக்குமா? அதுவும் லேசான மழையில் நனைந்துகொண்டே நடக்கப் பிடிக்குமெனில் இந்தத் திரைப்படம் உங்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டு விடும். அப்படிப்பட்ட ரசனை மிக்க ஒரு திரைக்கதையாளனின் காலப் பயணம் தான் மிட்நைட் இன் பாரீஸ்.சில கதைகள் தானே திரைக்கதையை எழுதிக்கொண்டு விடும். வூடி ஆலன் எழுதி இயக்கியிருக்கும் "Midnight in paris" அத்தகைய ஒரு இலக்கியம் சார்ந்த ஃபேண்டஸி சித்திரம்.

கில் பெண்டெர் ஒரு ஹாலிவுட் எழுத்தாளன். தனது கனவு நாவலை முடிக்க முடியாமல் திணறும் தருவாயில் தனது Fiancee உடனும் அவளது பெற்றோருடனும் பாரீஸ் செல்ல நேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் பாரீஸ் அவனை ஈர்த்துவிடுகிறது. நகரத்தை அதன் போக்கில் சென்று ரசிக்க விரும்பும் கலா ரசனாவாதி. ஆனால் இவனது காதலியின் குடும்பம் சற்றே போலித்தனத்துடனும் பணக்காரத்தனத்துடனும் வாழும் ஆடம்பரவாதிகள். இரவு அவர்கள் கலந்துகொள்ளும் விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் அந்நியப்பட்டு தனியே காலாற நடக்கிறான். சரியாகப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது ஒரு கார் இவனருகில் வந்து நிற்கிறது.


அது ஒரு பழைய கார். 1920களின் பாணியில் உடையணிந்த மனிதர்கள். கில்லை காரில் ஏறுமாறு வற்புறுத்தி அழைத்துப் போகிறார்கள் 1920களுக்கு.

அங்கே ஆச்சர்யம் கொட்டிக் கிடக்கிறது. அது பாரீஸின் பப்களிலும் பார்களிலும் கவிதை இலக்கியம் என கரை புரண்டு ஓடிய காலம். கில் பெண்டெரின் ஆதர்ச எழுத்தாளர்களும் ஓவியர்களும் வாழ்ந்த காலம். திகைத்திருக்கும் கில்லிடம் ஹெமிங்வேயை அறிமுகம் செய்து வைக்கின்றனர். நம்பமுடியாமல் திணறுகிறான். நீ என்ன எழுதுகிறாய் என ஹெமிங்வே கேட்கிறார். நாஸ்டால்ஜியா ஷாப் வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய கதை என்று கில் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு கிர்ட்ரூட் ஸ்டெய்னை (எழுத்தாளினி,விமர்சகர்) அறிமுகபப்டுத்தி வைப்பதாக கூறுகிறார்.ஆச்சர்யத்தின் உச்சியில் இருக்கும் கில் ஹோட்டலுக்குப் போய் நாவலின் பிரதியை எடுத்து வரப் போகிறான். வெளியே வந்து பார்த்தால் மீண்டும் 2010.

மறுநாளும் அதே வகையான அனுபவங்கள். இந்த முறை சந்திப்பது பாப்லோ பிகாஸோவை. பிகாஸோவின் காதலி ஆடிரியானாவுக்கு கில்லை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போக காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதே சமயம் பகலில் நிகழ்காலத்தில் விரும்பும் காதலியுடன் மனது ஒத்துப் போக மறுக்கிறது. அவளுக்கும் இவன் பேரில் சந்தேகம் வர கில்லை ஒரு மாதிரியாக நினைத்து ஒதுங்க ஆரம்பிக்கிறாள். பகலிலும் தனியாளாக பாரீஸை சுற்ற ஆரம்பிக்கிறான்.

ஒரு பழைய புத்தகக் கடையில் புஸ்தகங்களை மேய்கையில் 1920ல் சந்தித்த ஆட்ரியானாவின் டைரி கிடைக்கிறது. அவள் ஒரு அமெரிக்க எழுத்தாளரை சந்தித்ததாகவும் அவனை காதலித்ததாகவும் எழுதியிருக்கிறாள்.பரவசமாகி விடுகிறான் கில். இரவு அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்று இரவு மீண்டும் தன் பொற்காலத்துக்கு செல்கிறான்.

கில்லும் ஆட்ரியானாவும் முத்தத்தைப் பரிமாறியபடி பாரீஸ் வீதிகளில் நடக்கும்போது ஒரு குதிரை வண்டி வருகிறது. அவர்கள் இருவரையும் ஏற்றியபடி குதிரை வண்டி செல்வது 1890களுக்கு, கில்லுக்கு தலை சுற்றுகிறது. ஆட்ரியானா, பௌல் காகின் எட்கர் டேகா போன்றவர்கள் வாழும் இது தான் தன் பொற்காலம் எனவும், இங்கேயே தங்கி விடலாம் என வற்புறுத்துகிறாள். ஆனால் 1890களில் வாழும் இலக்கியவாதிகள் ரினைஸான்ஸ் காலமே உண்மையான பொற்காலம் என கருதுகின்றனர். கில் பெண்டருக்கு உண்மை புரிகிறது.

தான் வாழும் காலத்தை விட தன்னுடைய நினைவில் பதிந்திருக்கும் ஆதர்சமான காலம் தான் அனைவருக்கும் ப்ரியம் தருகிறது என்று உணருகிறான். மீண்டும் 2010 க்கே வந்து விடுகிறான்.

இப்பொழுதும் இந்த நள்ளிரவிலும் பாரீஸில் லேசான மழை பெய்கிறது.கில் பென்டெர் நனைந்தபடியே நகரத்தின் அழகை வியந்தபடியே நடக்க ஆரம்பிக்கிறான்.அப்பொழுது அந்தப் பெண் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். அவள் யார் என்பதை திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

கில் பெண்டராக ஓவன் வில்சன்.வூடி ஆலனை அப்படியே மறுபிரதியாக பார்ப்பது போல் உள்ளது.கண்களில் ஆச்சர்யமும் ஆர்வமும் கொப்புளிக்கும் அற்புதமான நடிப்பு. கிறங்கடிக்கும் பின்னணி இசை, ஒளிப்பதிவு என பாரீஸின் தரமான பக்கத்தை காட்டும் திரைப்படம். இவ்வளவு இலக்கிய வாடை அடிக்கும் படத்தில் இலக்கிய விசாரங்களுக்குக் கேட்கவா வேண்டும். வசனத்தில் பின்னி எடுத்திருக்கிறார் வூடி ஆலன். மிகையில்லாத ஃபேண்டஸி காட்சிகள் , அதே நேரத்தில் வெறும் காரில் ஏறுவதிலேயே காலத்துக்குள் பிரயாணம் செய்யவைக்கும் வித்தை என அசத்தியிருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் வந்த இலக்கியவாதிகளின் கோபம்,விமர்சனம் அழகியல் குறித்த பார்வை பல்வேறு நுணுக்கங்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் காதல்,ரசனை, பரவசம், ஆதர்சம் என எல்லாவிதத்திலும் – Midnight in Paris - மயங்கவைக்கும் ஒரு இலக்கிய சினிமா!

மயக்கம் என்ன - எமோஷனல் மசாலா!


அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. அதுவும் சமீப காலங்களில் எமோஷனல் டிராமா என்கிற ஒரு தளமே விடுமுறைக்கு சென்று , திரும்பி வந்திருக்கிறது "மயக்கம் என்ன " மூலமாக.




தனுஷ் செல்வராகவன் இணைந்தால் என்ன நடக்குமோ ..அதே தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் பண்பாட்டு மீறல்கள், கொஞ்சம் சைக்கோத் தனம், ஆனால் இம்முறை பாஸிட்டிவாக ஒரு கிளைமாக்ஸ். அங்கங்கே பளிச்சிடும் லாஜிக் பொத்தல்களையும் மீறி மனதைக் கவர்ந்து விடுகிறது படம்.

( கார்த்திக்) தனுஷ் ஒரு ஃபோட்டொகிராஃபர். நண்பரின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்கள் கார்த்திக்கும் அவன் தங்கையும். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷிடம் அசிஸ்டண்ட்டாக சேரும் ஆசையில் அவர் முன் தன் புகைப்படங்களை காட்டுகிறான். அவமானப் படுத்தி அனுப்பி விடுகிறார்.ஆனால் அதே புகைப்படங்களை தன் பெயரில் பத்திரிக்கையில் வெளியிட்டு பேர் வாங்கிக் கொள்கிறார். இதனிடையில் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டுக்கும் (ரிச்சா) கார்த்திக்குக்கும் காதல். நண்பனை சமாதானப் படுத்தி ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். தான் எடுத்த புகைப்படத்துக்கு மாதேஷுக்கு விருது கிடைத்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழுந்து மன நலம் பாதிக்கப்படுகிறான். நிறைய குடித்து , மனைவியை அடித்து , அபார்ஷன் வரை கொண்டு போய் பின் மனம் திருந்தி மனைவியின் முயற்சியால் பத்திரிக்கைகளில் கவனிக்கப்பட்டு பிரபலமாகிறான். சர்வதேச புகைப்பட விருதுக்காக மாதேஷுடன் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றும் போட்டிக்கு கலந்து கொள்கிறது. யாருக்கு விருது என்பதுடன், கார்த்திக் மாதேஷுக்கு அழுத்தமாக தாங்க்ஸ் சொல்வதுடன் படம் முடிகிறது.

நமக்கு பாலச்சந்தர் படத்தில் ஆரம்பித்து விக்ரமன் படத்தில் முடிவது போல ஒரு பிரமை. ஆனாலும் அங்கங்கே தெரியும் செல்வராகவன் டச், படு ஷார்ப்பான வசனங்கள் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.



ஒரு ரெகுலர் தமிழ் சினிமா கதை தான். ஆனல் வசனங்களும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,முக்கியமாக ஜீ.வி யின் பின்னணி இசையும் (ஒரிஜினல் என்று நம்புவோம்) படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. தனுஷும் ரிச்சாவும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் நிச்சயமாக இதற்கு முன் நமக்கு பாலு மகேந்திரா படங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் வந்தவுடன் ஸ்க்ரீன் அருகே போய் ஆடும் விடலைகளைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில் தான் (காதல் என் காதல்). ஓட ஓட பாட்டை படமாக்கியிருக்கும் விதமும் வித்தியாசம். மற்றபடி மயக்கம் என்ன ஒன்றும் புது வகையான படமெல்லாம் இல்லை. இரண்டாவது பாதியில் திரைக்கதையில் சற்று தொங்காமல் இருந்திருந்தால் செல்வராகவனுக்கு இது இன்னொரு 7 ஜியாக இருந்திருக்கக்கூடும்.

உருக்கமான காதல் கதை என நினைத்து வந்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனாலும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது வேலாயுதம் மங்காத்தா வெற்றி பெறுவதை விட உத்தமமானது .

மயக்கம் என்ன - Typical Selvaraghavan Film.
**********************************************************************************