RSS

டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT


       
FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித்தும் குஜாலாகவும் வாழும் விமானி. ரிப்பேர் ஆன விமானத்தை தன் சாதுர்யத்தால் தரையிறக்கி பல பேர் பிழைக்கக் காரணமாயிருக்கிறார்.  ஒரே நாளில் நேஷனல் ஹீரோ. ஆனால் பழுதடைந்த அந்த விமானத்தை தரை இறக்கும் முன் ரெண்டு பெக் போட்டு விடுகிறார். விசாரணையில் பைலட் குடித்திருப்பது தெரிந்தால் சிக்கல். அசாத்திய திறமை கொண்ட வாஷிங்டனை பைலட் யூனியனும், ஏர்வேஸும் காப்பாற்றப் போராடுகிறார்கள். காயத்தோடும் மனிதர் குடித்துக் கொண்டே இருக்கிறார். இடையில் இன்னொரு போதைக்காரப் பெண்மணியிடம் உன்னதமான தொடர்பு வேறு. குடிப்பழக்கத்தைக் கைவிடும் உளவியல் சிக்கல்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. விசாரணை துவங்கும் முந்தின இரவு அறையில் பாட்டில்களுடன் டென்ஸல் காண்பிக்கும் போராட்டம் , அசத்தியிருக்கிறார். சுலபமாக ஒரே ஒரு பொய் சொல்லிவிட்டால் கெட்ட பெயரிலிருந்தும் சிறையிலிருந்தும் தப்பித்து விடலாம். அதை டென்ஸல் சொன்னாரா, கிளைமேக்ஸ் என்ன என்பதையும், திரையில் பார்த்துக் கொள்ளவும்.
” Leaving Las Vegas"  நிக்கோலஸ் கேஜுக்குப் பிறகு குடிகாரர்களின் வாழ்க்கையை அசலாக வாழ்ந்திருப்பது டென்ஸல் தான். இரண்டு ஆஸ்கார் பரிந்துரைகள் என்கிறார்கள். வென்றால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. டைரக்‌ஷன் : ராபர்ட் ஸெமிகிஸ்.(Cast Away, Forrest Gump)

 

பட்டு : அலெஸான்ட்ரோ பாரிக்கோ - சுகுமாரன்(தமிழில்)
 

பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுத் தற்போது தமிழில் தரை தட்டியிருக்கும் இத்தாலிய நாவல். 1860களில் நடக்கும் ஒரு உன்னதமான காதல் கதை.
ஹெர்வே ஜான்கர் ஒரு பட்டுப் புழு வியாபாரி. ஹெலென் அவனது மனைவி. வருடத்தின் சரி பாதி நாட்கள் வியாபார நிமித்தம் வெளிநாடுகளில் அலைந்து , மிச்ச நாட்களை ஓய்வுடன் கழிக்கும் செல்வந்தன் ஜான்கர். ஒரு முறை ஜப்பான் பயணப்பட நேர்கிறது. அங்கு இவனோடு வியாபாரம் செய்யும் ஹரா கீய் என்பவனது துணைவி(?)யுடன் காதல் பற்றிக் கொள்கிறது. இவனிடம் ஒரு காதல் கடிதம் கொடுக்கிறாள்.ஜப்பானிய பாஷை தெரியாததால் அதன் அர்த்தம் தெரிய துடிக்கிறான். ப்ளான்ச்சி எனும் விபசாரியிடம் உதவி கிடைக்கும் என்று தெரிந்து அவளிடம் செல்கிறான்.
 

 ”திரும்பி வா...இல்லையேல் இறந்துவிடுவேன்!” - இது தான் அந்தக் கடிதம்.
 

அவள் பால் உள்ள ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் ஜப்பான் பயணமாகிறான். மிகுந்த எதிர்பார்ப்புடன் நான்காவது தடவையாக செல்லும்போது  அதிர்ச்சியும் சோகமும் தான் அவனுக்கு விடையாகக் கிடைக்கிறது.நஷ்டப்பட்டுத் திரும்பியதும் மீண்டும் ஒரு கடிதம்,அவன் முகவரிக்கு. அந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்பதையும் யார் எழுதியது என்பதையும் ஒரு சின்ன ட்விஸ்டோடு முடிக்கிறார் அலெஸ்ஸாண்ட்ரோ பாரிக்கோ.
முழுக்க முழுக்க எமோஷனல் அத்தியாயங்கள்.  மொழிபெயர்ப்பதில் என்ன அவசரமோ, ஒரு அத்தியாயத்தைக் கூட மனம் ஒன்றிப் படிக்க முடியவில்லை. மரியாதைக்குரிய எழுத்தாளரிடமிருந்து ஒரு டப்பிங் சீரியல் டைப் மொழிபெயர்ப்பை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப்  படுத்தியது, வாசிக்க , மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது.
 

”அவன் வாங்கி விற்றான்.
 

பட்டுப் புழுக்கள்”
 

இது சின்ன உதாரணம் தான். இதைப் போன்ற ஏராளமான பத்திகள் உள்ளன. இவ்வகையான மொழிபெயர்ப்புகள் நம்மை மூலக்கதையிலிருந்து மேலும் அந்நியமாக்குகின்றன.  கதையின் பிரதானப் புள்ளி ஜான்கருக்கு அந்த ஜப்பானிய பெண்ணிடம் ஏற்படும் Obsession . இனம் புரியாத அந்த மிகுஈர்ப்பு தான் அவனை ஜப்பான் நோக்கிப் பயணப்படவைக்கிறது. ஒவ்வொரு முறை அவனது பயணத்தில் குறுக்கிடும் ஏரியை உள்ளூர்வாசிகள் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கிறார்கள். இது போன்று ஏராளமான நுண் தகவல்களை மொழிபெயர்ப்பு கவனப் படுத்த மறுக்கிறது. அது ஒன்று தான் பெரும் குறை. ஒரு மகத்தான குறுநாவல் மனதில் பதிய மொழிபெயர்ப்பே தடையாக இருப்பது சோகம் தான்.
 

வெளியீடு : காலச்சுவடு                          விலை : 95 ரூ
 

நீதி: அட்டையைப் பார்த்து அவசரப்பட்டுப் புஸ்தகம் வாங்கக் கூடாது!

மணி சார் ! நீங்க நல்லவரா? கெட்டவரா?


மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழுது அப்படியே உல்டா.
இந்தளவுக்கு சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வார்கள் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும். ஆய்த எழுத்தில் தொடங்கிய வீழ்ச்சி கடலில் மூழ்கியே விட்டது. படம் பிடிக்கவில்லை என்பதை விட மணிரத்னம் போய் இப்படி படம் எடுத்திருக்கிறாரே என்ற ஆதங்கம் தான் எல்லோருடைய விமர்சனத்திலும் தெரிகிறது. இதே வீழ்ச்சி பாலச்சந்தருக்கும் பாரதிராஜாவுக்கும் நடந்தது. படைப்பாளுமைகளை நாம் நினைவில் வைத்திருப்பது அவர்களது மாஸ்டர் பீஸுகளுக்குத் தானே ஒழிய அவர்களது சராசரி படைப்புகளுக்காக அல்ல.

கடல் ஏன் உள்வாங்கியது?

மூன்று விஷயங்களை சொல்லலாம்.

1.காட்சிப்படுத்த ரொம்பவும் சிரமமான கதை.  God vs Satan முட்டல் மோதல்களை தத்துவார்த்த நாவலாக படிக்க நன்றாக இருக்குமே தவிர அதை காட்சிகளாக பார்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. நாவலாகப் படித்தாலே இரண்டு மூன்று முறை வாசித்தாக வேண்டும், புரிவதற்கு.

2.கேரக்டரைசேஷன் - ராவணனிலும் இதே பிரச்சினை தான். விக்ரம் யார்? எதற்காக மக்கள் அவரை சப்போர்ட் பண்ணுகிறார்கள். பிரபு , பிரியாமணி, பிருத்வி இவரக்ளுக்குள் நடக்கும் பகைமைகளின் பின்னணி என்ன? யாருக்குமே தெரியவில்லை.நிறைய கேரக்டர்கள்.குழப்பக் கதம்பம்.கிட்டத்தட்ட கடலிலும் இதே பிரச்சினை தான்.  கேரக்டர்களின் பின்னணி உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதாது. படம் பார்க்கிற எங்களுக்கும் தெரிய வேண்டும் மணி சார்! அவ்வளவு நேரம் தெளிவாக ஊர்சுற்றும் துளசி, அவர் பைத்தியம் என்று சொன்னதும் லூசாக நடந்து கொள்கிறார். அதற்கு பிறகு நமக்குப் பைத்தியம் பிடிக்கிறது.இதைப் போல் நிறைய காட்சிகள் உள்ளது.

3. பொதுவாக மணிரத்னம் படங்களில் முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்லும். ரோஜா , பம்பாய் எல்லாம் ஆரம்பிப்பதும் தெரியாது, இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடுவதும் தெரியாது. அவ்வளவு க்ரிப்பாக இருக்கும். இந்தப் படத்தில் எப்படா இடைவேளை விடுவார்கள் என்று நகர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. இடைவேளைக்குப்  பிறகு படம் எப்படா முடியும் என்று இருந்தது வேறு விஷயம்.

அப்புறம் Love Sequence.  காதல் காட்சிகளைப் படமெடுப்பதிலும், பாடல் காட்சிகளைப் படமெடுப்பதிலும் இந்தியாவுக்கே கிளாஸ் எடுத்தவர் நீங்கள். இத்தனை அற்புதமான பாடல்களை கொத்துப் பரொட்டா போட்டிருப்பது வேதனையாக இருக்கிறது. அதிலும் வான், மண் நீர் (Choir Song) என்று உணர்ச்சி பொங்க அரவிந்தசாமி கத்திக்கொண்டே வருவது இத்தனை டிராஜடியிலும் ஒரு காமெடி.

எழுதிய ஒரு படைப்பை திரைமொழியில் தந்ததால் தான் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என மறக்க முடியாத சினிமாக்கள் தமிழில் வந்தன. ஆங்கிலத்தில் அதற்கு மில்லியன் உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம். யான் மார்டெலின் “Life Of Pi" .  ஆகவே மிகவும் ஆவரேஜ் இலக்கிய மற்றும் சினிமா ரசிகர்களாகிய  நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ,இன்னும் எத்தனையோ தமிழ் நாவல்கள் படமாக்கப் படாமல் லைப்ரரிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. ட்ரெண்ட் செட்டரான நீங்கள் அதைத் தூசி தட்டி திரைப்படமாகக் கொண்டு வரத் துவங்கினால் நூறு பேர் அதைப் பின் தொடர்வார்கள். இது கொஞ்சம் அதீதம் தான் என்றாலும் நப்பாசைக்கு எல்லைகள் எதற்கு?

இசை நன்றாக இருந்தாலும் பின்னணி இசைக்கும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை.யதார்த்தம் என்ற பேரில் கொல்லாமல் அழகாக படம் பிடித்திருக்கிறார் ராஜீவ் மேனன்.எடிட்டரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது. எப்படி வெட்டி ஒட்டினாலும் இந்த திரைக்கதையை பஞ்சர் பார்த்திருக்கவே முடியாது. அப்படி ஒரு அடாசான திரைக்கதை இது.

தியேட்டரில் முன்னே அமர்ந்திருந்த கல்லூரி இளசுகள் கத்திக் கொண்டே இருந்தன. முன் வரிசையில் இரண்டு பேர் மொபைலையே நோண்டிக்கொண்டிருந்தார்கள். பக்கவாட்டில் ஒரு சிறுவன் சீட்டைப் பிறாண்டிக் கொண்டிருந்தான்.  I like only manirathnam films ya என்கிற வாசகங்கள் இந்த நூற்றாண்டில் நகைச்சுவையாகப் பார்க்கப் படுவது அவருடைய கிளிஷேக்கள் காலாவதி ஆகிக்கொண்டிருப்பதை தான் காட்டுகின்றன. கேங்க்ஸ்டர் படமோ, ரொமாண்டிக் படமோ அல்லது பரீட்சார்த்த முயற்சிகளோ   எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் தெளிவான ஒரு கதையும் இண்டரஸ்டிங்கான ஒரு திரைக்கதையும் தான்.

ஸ்தோத்திரம்!

வனசாட்சி - தேசமற்றவர்களின் பிரதி



வரலாறு எப்பொழுதும் வென்றவர்களையே வீர்யமாகப் பதிவு செய்திருக்கிறது. சாமான்யர்களை, அதிலும் அலைக்கழிக்கப்பட்டவர்களை பாராமுக‌மாகக்கூட அல்ல, பதிவு செய்யாமலே விடுவது தான் சரித்திரத்தின் வழக்கம். எத்தனையோ உதாரணங்கள் உண்டு.  குறுகிய காலத்தில் நடந்ததாலோ என்னவோ இந்திய-பாகிஸ்தான் பிரிவினையே நம் வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து இலங்கைக்கு சென்று காட்டை வளப்படுத்தி , தேயிலைத் தோட்டங்களாக்கி உலகின் அரைவாசிப் பேருக்கு தேநீர் தந்து , நாட்டை வள‌மாக்கி  அதன் இம்மியளவு பிரயோசனங்களைக் கூட அனுபவிக்காமல் அங்கிருந்து துரத்தப்பட்டு எந்த தேசத்திலும் ஒன்ற முடியாமல் வாழ்ந்த மலையகத் தமிழர்களைப் பற்றி சிறு குறிப்பேனும் நம் பாடப்புத்தகங்களில் கிடையாது என்பதே நிதர்சனம்.

அந்தக் குறையை சிறிதளவேனும் போக்கியிருக்கிறது தமிழ்மகனின் வனசாட்சி எனும் சமீபத்திய புதினம்.  தோட்டத்தொழிலாளர்கள் என்று நினைக்கும் போதே, ரொம்பவும் இதமான தட்பவெட்பம், இலகுவான வேலை (இலையைக் கிள்ளி சுமந்திருக்கும் கூடையில் போடுவது தானே ) என்றே ஞாபகச்சில்லுகளில் உறைந்துபோன ஒரு காட்சிப் படிமம் தான் வருவது வழக்கம். அந்த நம்பிக்கை முதல் மூன்று பக்கங்களிலேயே சிதறி விடுகிறது.  

கலவரமும் நடுக்கமும் பயமும் சரிவிகிதத்துடன் கலந்த அந்த இடம்பெயர்தலில் தொடங்குகிறது கதை.  மண்டபத்திலிருந்து தோணி ஏறி கட்டுவிரியன்களுடனும் கரடிகளுடனும் பாம்புகளுடனும் போராடி காட்டுப் பாதையில் நடந்தே மாத்தளை , கண்டி எனப் பிரயாணித்து தேயிலைத் தோட்டம் வந்து சேர்கின்றனர் முதல் தலைமுறை இந்தியத் தமிழர்கள். ஊரில் பஞ்சம், கடன் என நொந்து போய் இலங்கையில் நாலு காசு பார்த்து ஜமீந்தாராக திரும்பலாம் என கனவுக‌ளோடு தோட்டத்தில் கால் வைப்பவர்களுக்கு நிஜம், தோட்டத்துக் குளிரைப் போலவே  எலும்பை ஊடுருவித் தாக்குகிறது. கங்காணிகள், தோட்டத் துரைமார்கள் (பிரிட்டிஷார்) என அங்கும் விதி விளையாடுகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை. ஏன் என்று கேட்க நாதியற்றுப் போய் எதையும் எதிர்க்கும் திறனே அற்றுப் போகிறார்கள்.  உலகன், அருக்காணி, ரத்தினம் எனப் பலபேரின் வாழ்க்கை விவரிப்புகள் என்றாலும் , அவர்கள் படும் துன்பம் ஒன்றே. அடிமை என்பதன் அர்த்தத்தை பரிபூர்ணமாக அனுபவிக்கும் தமிழர்கள்.  எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கையில் மேலே எழும்பி வந்துவிட முடியாத சாபம் கொண்ட தமிழர்கள். 

எப்பொழுதும் சுரண்டலின் அச்சாணியாக இருப்பது தரகர்கள்தாம். இதிலும் கங்காணி எனப் பெயர் கொண்ட தரகர்களே இவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள். பலவீனங்களைப் பயன்படுத்த அறிந்திருந்த தரகர்கள். கொத்துக் கொத்தாக தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை ஆசை காட்டி தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துவந்தவர்கள். எந்த ஒரு அடிமை வரலாறும் இவர்கள் இல்லாமல் நிறைவு பெறாது. ஆழ்ந்து யோசித்தால் நாவலில் அவ்வப்போது வரும் இந்தக் கங்காணிகளே கதையில் திருப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். பயத்தை அறுவடை செய்யும் வியாபாரிகளாக உலா வரும் இந்த தரகர்களே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள் (முதல்வர் சுவாமிநாதன் என்பவரைக் கூட கங்காணியாகவே காண முடிகிறது).

புதினம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது 

முன்பனிக்காலம் - பஞ்சத்துக்காக இங்கிருந்து இலங்கைக்கு செல்லும் தலைமுறையினரின் கதை.

பின்பனிக்காலம் - சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்த்தத்தால் அங்கிருந்து விரட்டப் பட்டு இந்தியாவில் மீண்டும் தஞ்சம் புகும் காலம்.

இலையுதிர்காலம் - ராஜிவ் படுகொலை தொடங்கி முள்ளிவாய்க்கால் மரணம் தொட்டு தற்போது வரை.

வன சாட்சி , காசிபிள்ளை, மல்லிகா, சிவசங்கரன் பொன்னப்பன் எனப் பலரின் கதையாக விரிந்து கடவுசீட்டு கிடைக்கப்பெறாமல் குடும்பத்தை இந்தியாவுக்குத் தாரை வார்த்து அங்கேயே தங்கி போராளியாக மாறிப் போகும் லட்சுமியைத் தேடிப்போகும் முருகன் எனும் இந்தியத் தமிழ்பேராசிரியனின் கதையாக மையம் கொள்கிறது.  
தன் அத்தை லட்சுமி என்னவானாள் என்பதை முருகன் கண்டுபிடிப்பதும் கடைசியில் ஏற்படும் திருப்பமும் சற்றே நாடகத்தனம் என்றாலும் , அது என்னவென்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்க. சுவாரஸ்யமாக இருப்பதால் அது கதையின் நம்பகத்தன்மையை பாதிக்கவில்லை. அந்த டிரமாட்டிக் த்ரில்லும் இல்லையென்றால் இது வெறும் துன்பியல் பிரதியாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கிளைக்கதைகள் பல உண்டென்றாலும் எதிலும் யாருக்கும் நல்லதே நடப்பதில்லை. கதையின் இன்னொரு முக்கியமான பலம், ஊடகங்கள் கட்டிவைத்திருக்கும் ஈழத்தமிழர்  அனைவரும் ஒன்றே என்பதைப் போன்ற  ஒரு மாய பிம்பத்தை அசைத்துப் பார்த்திருப்பது. 

பொன்னப்ப தாத்தா சொல்வது போல‌ 

"மூனு தினுசு தமிழன் இருக்கான். ஒன்னு யுகம் யுகமா இலங்கைலயே இருக்கறவன். பெரிய்ய பெரீய வக்கீலு கவுருமெண்டு அதிகாரி எல்லாம். இன்னொன்னு வியாபாரி..பேங்கு, வட்டிக்கடை நடத்துறவன்.ஒரு ரூவா போட்டு பத்து ரூவா எடுக்கறவன். மத்தது நம்மளை மாதிரி ரப்பர் தோட்டம் டீ தோட்டம்னு அட்டைக்கடில சாகிறவனுங்க. வக்கீலு வியாபாரி மேல கை வைக்க முடியுமா. அதான் நம்ம மேல பாயறானுக."

ராஜீவை படுகொலை செய்தால் இந்திய உதவிகள் நின்று போகாதா என ஒரு போராளியின் நியாயமான சந்தேகத்தை ஒரு கதாபாத்திரம் கேட்கிறது. இன்னும் காந்தி நேரு ஃபோட்டோவையே வீட்ல மாட்டிருந்தா நம்மளை எப்படி நம்புவான் என்கிறது மற்றொரு கதாபாத்திரம். 

முதலாளி- கங்காணி- தொழிலாளி வேறுபாடுகள் எப்படி சிங்கள - தமிழ் வேறுபாடுகளாக மாறியது என்பதையும் யோசிக்க வைக்கிறது வனசாட்சி. மேதாவித்தனங்களற்ற , தன்னுரைகள் அதிகமல்லாத, உரையாடல்கள் வழியாகவே கதையை சாமர்த்தியமாகக் கொண்டு போவது படைப்பாளியின் வெற்றி. தான் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரும் ஏதோ ஒரிடத்தில் குழம்பித் தவிக்கிறார்கள். தனது வேர் எதுவென்றே தெரியாமல் கலங்கி நிற்கும் ஜனங்களின் வார்த்தைகளை வலியை அங்கங்கே புகுத்தியிருப்பது கச்சிதம்.வெட்டுப்புலி  நாவலைப் போல இதிலும் அரசியல் முடிவுகள் , சம்பவங்கள் ஒவ்வொருத்தர் வாழ்விலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் தமிழ் மகன். 
ஆனால் இதே கதை சொல்லல் முறையை அடுத்த புதினத்திலும் கையாண்டால் சலித்துவிடும்.

கதையில் பெரிய சாமி என்பவனுக்கு இந்த சந்தேகம் வரும்.
 
"சேனநாயகா பண்டாரநாயகா மீது கூட  கோபம் இல்லை, அவர்கள் தங்கள் ஜனங்களுக்காக பாடுபட்டது போல் நம் தலைவர்கள் ஏன் பாடுபடவில்லை என்பது தான் புரியவே இல்லை..."

நமக்கும் தான்.

*********************************************************************************
உயிர்மை வெளியீடு