RSS

அவன் இவன் - பாலாவின் நடுநிசி நாய்கள்


அறைக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் எழுதுவதை விட நடிப்பதும் படமெடுப்பதும் கஷ்டமான காரியம் தான்...ஆனால் நீங்கள் தேசிய விருது வாங்குவதற்காகவும் மனதில் இருக்கும் வக்கிரத்தை அவிழ்த்து வைப்பதற்காகவும் நாங்கள் நூறு நூற்றைம்பது கொடுத்து டிக்கெட் வாங்கி முப்பது நாற்பது என பார்க்கிங்கிற்கு அழும்போது தான் வேதனையாக இருக்கிறது.




தேவையற்ற உடலை வருத்திய நடிப்பு;எதிர்பாராத ட்விஸ்டுகளோ சுவாரஸ்யமோ, எதுவுமே இல்லாத மொன்னையான கதை;அதற்கு லாஜிக் பொத்தல்களுடன் ஒரு திரைக்கதை; மட்டமான Casting ;உயிரே இல்லாத பின்னணி இசை. இது தான் அவன் இவன்.

இந்த மாதிரி ஒரு கிராமத்தை தமிழகத்தில் எங்கே கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை. சகஜமாக திருடுகிறார்கள்.ஜட்ஜ் கிரிமினலைக் கூப்பிட்டு வீட்டு பீரோ லாக்கரை உடைக்க சொல்கிறார்.அவரே ராஜ மரியாதையோடு சுழல் விளக்குப் பொருத்திய அவரது அரசாங்க காரில் கிரிமினலை வழியனுப்பி வைக்கிறார்.அதை சாதனையாக கருதி பேண்ட் வாத்தியங்களோடு அவரது அம்மா குத்தாட்டம் போடுகிறார். இன்னொரு ஹீரோவின் அம்மா பீடி குடிக்கிறார்.பையனிடம் சரக்கு கேட்கிறார்.சக்களத்தியோடு கெட்ட வார்த்தையில் மோதிக் கொள்கிறார்.

இதையெல்லாம் விட கொடுமையின் உச்சக்கட்டம் அந்த கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷன். இத்தனை வருஷ தமிழ் சினிமா..ஏன் உலக சினிமா வரலாற்றில் கூட போலீஸ்காரர்கள இவ்வளவு அவமானப் படுத்திப் பார்த்ததில்லை.எண்பதுகளில் வரும் சினிமாக்களில் உலக உருண்டையை உருட்டிக் கொண்டே டயலாக் பேசி கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிற்பாடு வருவார்களே...அவர்களை விட அவன் இவன் போலீஸ்காரர்கள் படு மோசமாக காட்சியளிக்கிறார்கள்.கிரிமினல்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுப்பதெல்லாம் காமெடி என்றால்..ஸாரி பாலா..கண்ணீர் முட்டுகிறது.

அதுவும் அந்த ஹீரொயின்கள். மற்றவர்கள் படத்தில் ஹீரோயின்கள் எஞ்சினியரிங் காலேஜ் என்றால் பாலா படத்தில் எந்த காலேஜ்..ம்ம்..அதே தான்... டுடோரியல் காலேஜ்.இன்னொரு ஹீரோயின் கான்ஸ்டபிள்.விசகாலின் மாறுகண்ணையும் மீறி உருகுகிறார்.அதுவும் அந்த டுடோரியல் பொன்னு எதற்காக ஆர்யாவை காதலிக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.ஆர்யா அந்த பெண்ணை கவரிங் நகைகளை காட்டி ஏமாற்றியதற்காக குட்டிக்கரணம் போட சொல்கிறார், லவ் வந்து விடுகிறது.விஷால் அந்த லேடி கான்ஸ்டபிளிடம் பொன்னுங்க போடற பேண்ட்ல எதுக்கு ஜிப் என்று கேட்க,அதற்கும் லவ் வந்து விடுகிறது.இந்த கருமத்திற்கு மணிரத்னம் பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் எவ்வளவோ தேவலை.அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவார்கள்.அவ்வளவே!



படத்தின் ஒரே ஆறுதல் வில்லன் ஆர்.கே!பத்து நிமிடமே என்றாலும் பரவாயில்லை...குறிப்பிடும் படியான எக்ஸ்பிரஷன்கள்.ஜி.எம்.குமாரை வீணடித்திருக்கிறார்கள்.தைரியமாக இந்த வயதில் அம்மணமாக நடித்திருக்கிறார்.

சமகாலத்தின் முக்கியமான ஆளுமையான எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்கள் எதிர்பார்ப்புக்கு அருகில் கூட இல்லை.வலிந்து திணிக்கப் பட்ட கெட்ட வார்த்தைகள், எதார்த்தம் என்ற பெயரில் நடக்கும் உரையாடல்கள் படத்தின் மீதான அபிமானத்தை வெகுவாக குறைக்கிறது. அப்பட்டமான வட்டார மொழி இந்த படத்தை சறுக்க வைக்கிறது.

வழக்கமாக பாலாவின் படங்களில் படும் நெடுக இழையோடும் நகைச்சுவை இதில் சுத்தமாக இல்லை.அதனாலேயே ஜி.எம்.குமார் அம்மணமாக ஓடும் போது நமக்கு அதிர்ச்சிக்குப் பதிலாக வெறுப்பு வருகிறது.அதுவும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பின் எப்போதடா ஆர்யாவும் விஷாலும் சேர்ந்து வில்லனை சகதியில் முக்கி சாகடிப்பார்கள்,எப்போதடா வீட்டுக்குப் போகலாம் என்றிருக்கிறது.

டாப் நட்சத்திரங்களின் கால்ஷீட்;தன் வழக்கமான பாணி என்றைக்கும் செல்லுபடியாகும் என்கிற அதீத தன்னம்பிக்கை;ஆனால் அதே புளித்த மாவு என பாலா இன்னொரு மணிரத்னமாக மாறிவிடாமல் இருந்தால் சரி!




அவன் இவன் - Definitely Boring!

**********************************************************************************