RSS

ராவணாயனம் - காவியம்-->சினிமா-->அபத்தம்!


சுஜாதா என்கிற மனிதர் இல்லாமல் மணிரத்னம் போல இயக்குநர்கள் படம் எடுத்தால் படம் எப்படி இருக்கும்? விடை கடைசியில்.

படம் முடிந்து வெளியே வந்த போது காதில் விழுந்த சில கமெண்டுகள்:

" இந்தப் படம் எடுக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாம்."

" என்னாங்கடா இது லிங்குசாமி படத்துல வர்ற மாதிரி இருக்கு அவ்வளோ உசரத்தில் இருந்து குதிச்சா ஒரு சின்னக் காயம் கூடவா படாது?ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுட்டு வர்ற மாதிரி ஜம்முனு வர்றாய்ங்க! "

"நல்ல வேளை கார்த்திக்குக்கு வால் ஒன்னு மாட்டி விடலை"

"வீட்ல உக்காந்து ஃபுட்பால் பார்த்திருக்கலாம்"

" இந்த படம் பாக்க வந்ததுல நடந்த நல்ல விஷயம் செம்மொழி பாட்டை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தது தான்!"


ராவணன் ஸ்டில்களில் சில, ரஷோமோன் படத்தின் ஸ்டில்களைப்போல இருந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ராமாயணத்தைக் கொஞ்சம் புதுசாக சொல்லியிருப்பார்களோ என்று. ஆனால் ஓபனிங் சீனில் வீரா ராகினியை(ஐஸ்வர்யா பச்சன்)கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்...சினிமாத்தனத்தின் உச்சம்.ரோஜா படத்திலயே நல்லாக் கடத்தினீங்களேய்யா..!

ராவணனின் கதையை சொல்வது என்று முடிவெடுத்த பின் அந்த ஒரு கேரக்டரையாவது கொஞ்சம் குழப்பமில்லாமல் சொல்லியிருக்க வேணாமா?விக்ரம் அடிக்கடி டுர்ர்ர்..டன்டணக்க டண்டனக்க...என்கிறார்,பக் பக் பக் என்கிறார்.கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல.படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.டைட்டிலை நியாயப் படுத்துகிற மாதிரி அடிக்கடி "பத்து தலை...பத்து தலை"என்று வசனங்கள் வேறு.விக்ரம் இன்னும் தமிழ் ஜனங்கள் இது போன்ற மேனரிசங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாரானால், ரொம்ப கஷ்டம் பாஸ். ஆனால் சில காட்சிகளில் எக்ஸ்பிரஷன்கள் அசத்தல்.

பிருத்விராஜ் அழகாக இருக்கிறார்.நன்றாக உறுமுகிறார்,ஆவேசமாக ஆக்ரோஷம் காட்டுகிறார்.இப்படியே நடித்தாரானால் இவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.சில காட்சிகளில் வீரா வீரா என்று கத்துவதை மக்கள் ரசித்தார்களானால் அடுத்தபடியாக சிங்கம் மாதிரி படங்களில் நடித்து நம்மை துன்புறுத்தக் கூடும்.

ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.கள்வரே கள்வரே என்று ராவண சேனைகளின் நடுவே பாடுவாரென்று எதிர்பார்த்துப் போனால் ஏமாந்து போவீர்கள்.அந்த அற்புதமான மெலடிக்கு சம்மந்தமில்லாமல் பரத நாட்டியம் ஆடி வதைக்கிறார்.வடிவேலுவெல்லாம் என்ன ஜுஜுபி..ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும் விக்ரமிடம் சீரியஸாக பக் பக் பக் என்று சொல்லும்போது வயிற்றைப் புண்ணாக்குகிறது.கிளைமாக்ஸிலும் உடைந்த சிலையின் முன் வேண்டிக்கொள்ளும் போதும் பழைய ஐஸ்.

ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்...???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)
சூர்ப்பனையாக ப்ரியாமணி.அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம். ஒரு டயலாக் கூட பேசாத இந்த கேரக்டருக்குத்தான் என்ன மாஸ்? சான்ஸே இல்லை...தமிழன் தமிழன் தான்!

முக்கியமாக குறிப்பிடவேண்டியது வசனங்கள். சுஹாசினி ஜெயா டி.வி.யில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தராசில் ஒவ்வொரு படத்தையும் எடை பார்த்துக் கை வலிக்க எழுதியிருப்பார் போல.திடீரென்று திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.திடீரென்று சாதாரணமாக பேசுகிறார்கள்.தலை சுத்துகிறது நமக்கு.மேடம் விமர்சனம் பண்ணுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

மணிரத்னம் சார்! பாடல் காட்சிகளை படம் பிடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காமல் பிண்ணனியில் ஓட விட்டதுக்கும் இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டை வைத்து படம் எடுத்ததற்கும் பாராட்டுக்கள்.உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே...அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு டெம்ப்ளேட் கதையிலேயே இவ்வளவு சொதப்பலா என்று தான் ஜீரணிக்க முடியவில்லை.

படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு - லொகேஷனும்,காமிராவும் பிண்ணனி இசையும்.சந்தோஷ் சிவன் மிரட்டியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இதவரைக்கும் படம் நெடுக சலிக்காமல் அழகாக காட்டைக் காண்பித்ததாக நினைவில்லை.
கடைசியாக கிளைமேக்ஸில் சி.டி யில் வராத பாடல் ஒன்று திரையில் பிண்ணனியில் வருகிறது.அற்புதம்!
 
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில் - சுஜாதா இல்லாமல் அடுத்து எந்திரன் வேறு வருகிறது!
**************************************************************************

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்



பதிப்பகம் : உயிர்மை.

ஆசிரியர் : எஸ்.வி.ராமகிருஷ்ணன்

நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் எழுதுவதில் அத்தனை சிக்கல்கள் கிடையாது.ஆனால் சமீப கால வரலாற்று சம்பவங்களை எழுதுவதில் சற்றுக் கவனமாயிருக்க வேண்டும். அதாவது 40 அல்லது 50 வருடங்களுக்கு முந்தைய கதைகள் என்றால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் அது நம் தாத்தாவிடம் கதை கேட்பது போல்.. சுவாரஸ்யம் கருதி நாலு பிட்டு தாத்தா சேர்த்து விட்டாரானால் பாட்டி போட்டுக் கொடுத்து விடுவார்.

மதுரைக்கல்லூரியில் படிக்கும்போது கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார்.வகுப்பில் பாடத்தைப் பற்றி பேசுவதை விட அவர் வாழ்ந்து லயித்திருந்த நாற்பது வருடங்களுக்கு முந்தைய மதுரையைப் பற்றியும் அந்தக்கால அரசியல் பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார். ஆனாலும் அந்தக் கதைகள் அவ்வளவு ரம்யமாயிருக்கும். தெருவிளக்கு ஏற்றும் அரசாங்க உத்தியோகஸ்தனின் ஜம்பம் முதல் பெரியார், காங்கிரஸ் சினிமா என்று எல்லாக்கதைகளுமே சற்று ஒரு சார்பாக இருந்தாலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. அந்த சுவாரஸ்யத்துக்கு நிகரானது எஸ்.வி.ராமகிருஷ்ணனின் வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.

அரசியலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திதாள்களும் பாடப் புத்தகங்களுமே போதும்.ஆனால் அன்றைய பழக்கவழக்கங்கள் ,மக்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதெல்லாம் புதுமைப் பித்தன் ,கல்கி போன்றோரின் கதைகளைப் படித்து நாமாக ஊகித்துக் கொள்ளவேண்டியது தான். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அந்தக் குறையை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கிறது.என் தாத்தாவும் அவர் அப்பாவும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கொஞ்சமேனும் அனுமானம் செய்து கொள்ள முடிகிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளை விவரிக்கிறது. நாற்பதுகள் தான் சென்ற நூற்றாண்டின் முக்கியமான பத்தாண்டுகள்,அரசியல் ரீதியாகவும் ,சமூக ரீதியாகவும்.இரண்டாம் உலக யுத்தம் ,பாகிஸ்தான் பிரிவினை , காங்கிரஸ் அதிகாரம் பெற்றதும் ,அமைப்பு ரீதியாக திராவிட கட்சிகள் வலுவடைய ஆரம்பித்ததுமான ஒரு Transition phase .

ஏறத்தாழ இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கி விடும் முப்பது கட்டுரைகளின் தொகுப்பே வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்.முன்னுரையை கூட ஒரு கட்டுரை போலவே எழுதியிருக்கிறார் எஸ்.வி.ராமகிருஷ்ணன்.கிட்டத்தட்ட 110பக்கங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட விஷயங்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் சந்ததியினருக்கு சாவகாசமாக சொல்வது போல் அமைந்திருப்பது இத்தொகுப்பின் விசேஷம்.

பள்ளிக்கூடங்களில் ஆண்களும் பெண்களுக்குமான நட்பும் மதிப்பீடும் எப்படி இருந்தது , பணம் -காசின் பரிமாணம் (அணா,பைசா,தம்பிடி கணக்குகள்),தீபாவளி எப்படிக் கொண்டாடினார்கள்,ஜானவாச ஊர்வலங்கள் என்பது போன்ற மேலோட்டமாக சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும் வாசிக்கையில் ஒரு விதமான குறு குறுப்பை ஏற்படுத்துவது உண்மை.

நம்மில் பெரும்பாலானோர் கடிதப் பரிவர்த்தனைகளையே மறந்து விட்ட நிலையில் அந்தக் காலத்தில் மொட்டைக் கடுதாசியின் சமூக அந்தஸ்து பற்றி ஒரு கட்டுரை.குச்சி ஐஸ் பற்றின விவரணைகளும், தமிழ்நாட்டில் அய்யப்பன் விரதங்கள் எவ்வாறு பிரபலாமனது பற்றியும் ,வக்கீல் நார்ட்டன் துரையின் பிரசித்தி பெற்ற அந்த Reverse Argument பற்றியும் கூட சற்று எள்ளல் நடையுடன் விவரித்திருப்பது அழகு.ஒரே குறை நாற்பதுகள் ஐம்பதுகளில் தமிழக அரசியல் சூழல் குறித்து சற்று விவரித்திருக்கலாம். அதாவது அண்ணா காலத்து திராவிடக் கட்சிகள் பற்றியும் ராஜாஜி காலத்து காங்கிரஸ் பற்றியும்.

மறு நாள் விடிந்தால் இந்தியா சுதந்திர நாடு.அதற்கு முந்தைய தினம் அதாவது பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி நாளான்று லார்ட் மவுண்ட் பேட்டன் கையெழுத்திட்ட கடைசிக் கோப்பு எது தெரியுமா? பாலன்பூர் நவாபின் ஒரு அதி முக்கியமான கோரிக்கை.அன்றைய பாலன்பூர் இன்றைய குஜராத்.(புத்தகம் முழுக்க இது போன்ற தகவல்களால் நிரம்பி வழிகிறது).பாலன்பூர் நவாபின் கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா......புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்களேன்.இந்தியா பிரிட்டனிடம் அடிமைப் பட்டதன் காரணம் தெரியும்.
**********************************************************************************