RSS

எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்


பொதுவாக இரண்டு தமிழர்கள் பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டால் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.எங்கே தமிழில் பேசினால் சக தமிழன் தன்னை தரக் குறைவாக நினைத்து விடுவானோ என்கிற அச்சம் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.வேறென்ன?தமிழ் மட்டுமே பேசினால் தன்னைப் படிக்காதவன் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.எதனால் இந்த நிலைமை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்தால் பலர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்முடைய ஆசையெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அரசியல் அல்லாது நிஜமாகவே மொழிக்குக் கிடைத்த கௌரவமாக மாற்றவேண்டும் என்பது தான்.

வரப்போகும் தமிழ் மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாக காற்று வாக்கில் செய்தி அடிபடுகிறது. நல்லது தான்.குழந்தைகள் பழகும் விதமாக இலகுவாக மாற்றப் போவதாக சொல்கிறார்கள். அதாவது 247 வடிவங்களிலிருந்து கொஞ்சமாக குறைத்தால் மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.உபயோகப் படுத்துவதும் எளிது என்பது அவர்களது கணக்கு. தமிழை இவ்வளவு வருஷங்களாக நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக்கொண்டதாகவும் இனி வரும் தலைமுறை எளிதாக கற்றுக்கொள்ளப் போவதாகவும் ஒரு நம்பிக்கை. வளைத்து வளைத்து எழுதுவதனால் தமிழ் வளரவில்லை எனக் கருதுவார்களானால் அதைப் போன்ற முட்டாள்தனம் இந்த பூமியில் இல்லை.

பிரச்சினை தமிழ் அல்ல.தமிழனின் உளவியல் சிக்கல் தான். படித்த நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தமிழில் பேசக் கூச்சப் படுகின்றன. ஆங்கிலத்தைப் போல் நம் தமிழும் சந்தேகத்துக்கில்லாமல் நல்ல மொழி தானென ஒத்துக் கொள்ள மறுக்கும் சமூகம்.தமிழில் சிந்தித்து கஷ்டப் பட்டாகிலும் ஆங்கிலத்தில் மனதுக்குள் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறார்களன்றி தமிழில் பேசினால் பாவம் என்பது போல ஒரு மனோபாவம். சென்னை நகரப் பள்ளிகளிலோ கேட்கவே வேண்டாம். ஆங்கிலப் புலமையே வேலை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் தமிழை தரை டிக்கெட் என்று குழந்தைகளை நம்பச் செய்வதில் சமர்த்தர்கள்.

தமிழக ஆட்சியாளர்களுக்கோ அலாவுதீன் அற்புத விளைக்கைத் தேய்ப்பது போல அரசாணை இட்டவுடன் எல்லோரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. மாணவர்கள் தமிழ் படிப்பதை பெருமையாக நினைக்க வழி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் சில்லறை ஸ்காலர்ஷிப்புகள் குவார்ட்டருக்கு கூடப் பத்தாது.

அடுத்ததாக பெயர்ப்பலகைகளை எல்லாம் தமிழ்ப் படுத்தப் போகிறார்களாம். அடிப்படை தப்பை சரி செய்யாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக நினைத்தால், நினைக்க வழி செய்தால் தன்னாலேயே தமிழ்ப் பெயர் வந்து விடப் போகிறது.

தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.

அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான். இது போதாதென்று பத்திரிக்கைகளில் கூட ஆனந்த விகட குமுதத் தமிழ் என்றும் காலச்சுவட்டு உயிர்மைத் தமிழ் என்கிற பிரிவெல்லாம் வேறு இருக்கிறது.

எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.

மாற்றம் அத்தியாவசிய தேவைதான். ஆனால் இப்போதிருக்கும் டெஸ்ட் மேட்ச்சை இருபது ஓவர்களாக்கி நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?

எதைத் தின்னால் பித்தம் தெளியும் நண்பர்களே?



பின் குறிப்பு :


எழுத்து சீர்திருத்தம் பற்றிய நண்பர் கனகரத்னம் ராஜ்குமாரின் கட்டுரை

என் குட்டிக் கடவுளுக்கு!



இவளின் அபத்தங்கள் சுவாரஸ்யமானவை

வெயிலோடும் வியர்வையோடும் வரும் தகப்பனிடம்

தெத்துப் பல் காட்டி சிரிப்பாள்

மொழிகளுக்கு வார்த்தை கொடுப்பாள்

சுவர்களுக்கு அர்த்தம் கொடுப்பாள்

வண்ணங்கள் பார்த்து வியப்பாள்

அம்மாவிடம் அடங்கிப் போவாள்

சொல்கூட்டங்களிடயே சுழலுவாள்

கடந்த ஜென்மம் பற்றிக் கூறென்பாள்

தொலைபேசியில் கதை சொல்லுவாள்

தொலைந்திருந்த வாழ்க்கையை மீட்டுத் தருவாள்

மார் மீதமர்ந்து தலை முடி பற்றுவாள்

காதோரம் நகைப்பாள் பள்ளிக்கதைகள் உதிர்ப்பாள்

இன்னும் எத்தனை காலம் இந்த அபத்தங்கள்

வாழ்வின் அனர்த்தங்கள் புரியும் முன்

மழலைத்தனம் முடியும் முன்

வாழ்ந்து தொலைந்து விடு என் குட்டிக் கடவுளே!

*******************************************************************

புகைப்படம் : நன்றி : கார்த்திக் ராஜ்

அங்காடி தெரு...பையா &.....



அங்காடி தெரு என்ற படம்.சுத்தி சுத்தி ஒரே தெரு.அதிலும் ஒரே பில்டிங்.சில மனிதர்கள் சில வாழ்க்கை. கலக்கி விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் சில முகங்கள் மனதை விட்டு அகலவில்லையாதலால் இந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

1. இவ்வளவு பெரிய சென்னையில் அந்த தெருவை விட்டால் அவர்களுக்கு வேறு கதியே இல்லையா? ப்லஸ் டூ படித்தவர்களுக்கு ஹுண்டாயிலும் நோக்கியாவிலுமே வேலை கிடைக்கிறதே..!

2. உண்மையிலேயே அவர்கள் சாப்பிடும் இடமும் சாப்பிடும் முறையும்   அவ்வளவு கோரமானதாகவா இருக்கும்?

3. விக்ரமன் படங்களில் யாருக்கும் கெட்டதே நடக்காது..வசந்தபாலன் சார்..உங்கள் படங்களில் யாருக்கும் நல்லதே நடக்காதா?

4. அந்தக் கடையின் சூப்பர்வைசர் கஸ்டமர்கள் முன்னால் நாயகியையும் மற்றவர்களையும் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கிறார். இது கொஞ்சம் அதீதமாகப் படவில்லை?

5. இந்த படம் பார்த்த பின் தி.நகர் கடக்கும்போதெல்லாம் இந்தப் படமே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறதே... அது நம் எல்லோருடைய தோல்வியா இல்லை உங்கள் இயக்கத்தின் வெற்றியா?

சில மிகையான காட்சிகளை தவிர்த்துவிட்டால் அங்காடிதெரு ஒரு அரக்கத்தனமான அற்புதமான படம். இது மாதிரியான ஒரு குறிப்பிட்ட பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிற படங்களே விருதுகளை வெல்லும் என தோன்றுகிறது. குறிப்பாக அஞ்சலியின் எக்ஸ்பிரஷன்களும் நடிப்பும் நம் நாயகிகள் இன்னும் வெறும் அழகான பேக்குகள் இல்லை என காட்டுகிறது.

நாட்டின் அதிமுக்கியமான பிரச்சினைகளை பேசும் படங்களை விட நாம் கவனிக்க மறந்த ஒரு கடை சார்ந்த அரசியலையும் வாழ்க்கையையும் சொல்லும் அங்காடி தெரு நேராக நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துகிறது. ஒருவிதமான எரிச்சல் கலந்த வலி அது.


வலி கூட தேவைதான் சில சமயங்களில், விருதுகளுக்காகவேனும்.

பையா

இந்தப் படத்தின் கதையை டைரக்டர் எந்த ஆங்கில படத்திலோ அல்லது ஹிந்தியிலோ அல்லது வேறு எந்த மொழிகளிலும் இருந்தோ எடுத்திருக்கவே முடியாது.காரணம் வேறொன்றுமில்லை ஜென்டில்மென்.... படத்தில் கதையே கிடையாது.இன்டர்வியூ போகும் ஹீரோவை தாதா சீண்ட அவரை ஹீரோ அடித்துவிட பதிலுக்கு தாதா துரத்த என்று பதினோராம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டிய படம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வில்லன்கள் எவ்வளவு பெரிய இரும்புத் தடி கொண்டு அடித்தாலும் ஹீரோக்களுக்கு காயமே படாது....கஷ்டம்!

சமீபத்தில் நானும் நண்பரும் ஒரு ஏ.சி. பஸ்ஸில் வந்துகொண்டிருந்தோம். பயணிகள் சலசலவென்று பேசிக்கொண்டும் நெளிந்து கொண்டுமிருந்தார்கள். ஏதோ புது படம் போல.அருண்விஜய் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பயணிகளின் எரிச்சலைப் பார்த்து கண்டக்டர் படத்தை மாற்றினார். எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் அமைதியாகி படத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தப் படம் - கரகாட்டக்காரன். தமிழ் ரசனை!