RSS

வௌ


வௌ என்ற எழுத்தை

வேறெங்கே பயன்படுத்துவது

வௌவால்களின் பெயர்க்காரணம் கூறுக?

****************************
அடர்மழை நேரம்

ஜன்னலோரத்தில் பிளாக் காஃபி

தூரத்தே கத்தும் பசுமாடு

****************************
நான் நலம்.நீங்கள் நலமா தரும்

நெருக்கத்தை சாகடித்து விட்டன

சில டெம்ப்ளேட் எஸ்.எம்.எஸ்கள்

****************************
காணி நிலம் வேண்டும் பராசக்தி

அஞ்சு வருஷத்தில் ஓ.எம்.ஆரில்

ரேட் டபுளாகிறதாமே

சிறுநகரக் காதல்கள்



உன்னை சைக்கிளில் பின் தொடர்ந்து

நீ படிக்கும் டியூஷனில் சேர்ந்து

உனக்கு முன் கோவிலில் நெய்விளக்கேற்றி

உனக்காக அர்ச்சனை செய்து

உனக்காக ஃபுட்போர்டில் தொங்கி

உன் பெயரை பஸ் சீட்டின் பின்புறம் எழுதி

உனக்காக ரிசல்ட் பார்த்து

உனக்காக ட்ரீட் வைத்து

கேண்டீன் அருகே காதலை சொல்லி

உன் அட்வைஸ் எல்லாம் கேட்டு

ஏதோ ஒரு மியூசிகல்ஸில்

இளைய நிலா பொழிகிறதில் ஆரம்பித்து

நிலாவே வா வில் முடிகிறது

பெருந்திரளான சிறுநகரத்துக் காதல்கள்!

*********************************************
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில்

பிரிந்து செல்லும் ஒரு கிளைச்சாலையில்

மூன்று கிலோ மீட்டர் தள்ளி

ஒரு மரத்தினடியில்

உலகையே வென்ற மமதையில்

ஒரு வாரம் துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்  மஜ்னுவும்

சிவப்பு சுடிதார் போட்ட லைலாவும்

காதல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்

எதிர்காலம் பற்றிய பயத்தைப் புறந்தள்ளிவிட்டு

யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தோடு...

நேஷனல் ஜியோகிராஃபிக் - சில அட்டகாசமான வால் பேப்பர்கள்


ஹன்டிங்டன் பீச் ஓஹியோ



ஸ்வால்பர்ட் நார்வே


அவான் நதிக்கரையில்


ஸ்னோகுவொல்மி ஃபால்ஸ் - வாஷிங்டன்



ஷெனான்டோவா


டால்ஃபின்கள்


அன்டிலொப் கான்யான் அரிஸோனா


 
அட நம்ம மலைக்கோட்டை இவ்வளோ அழகா ?




ஷ்ஷ்...யப்பா..என்னமா எடுத்திருக்கானுக ! நானும் காமிராவும் கையுமா அலைஞ்சிருக்கேன்... ஃபிகரைத் தவிர வேற எதுவுமே கண்ணுல படமாட்டேங்குது.

பாலாவின் அடுத்த படம்


முன் குறிப்பு:இந்தப் பதிவு பாலா இயக்கப் போகும் அடுத்த படம் பற்றியதல்ல. எப்படி இருக்கலாம் என்ற ஆசையே!



ஒரு படம் பார்த்தால் இது இந்த டைரக்டரின் படம் என்று ஒரு சிலருக்கே சொல்ல முடியும். அதில் இந்த Decade ல் பாலா முதன்மையானவர். சென்ற 7 அல்லது 8 வருடங்களில் மூன்றே படம்.அதில் நிறைய மதிப்பு மிக்க அவார்டுகள் என்று தமிழ் சினிமாவின் மரியாதையான அடையாளம்.ரொம்ப நாள் கழித்து டைரக்டரின் பெயர் டைட்டில் கார்டில் வந்தவுடன் விசில் பறந்ததும் பாலாவுக்கே.

ஆனால் பத்தாண்டுகளில் நடந்தது என்ன?விக்ரம் எனும் ஹீரோ கண்டுகொள்ளப் பட்டார். முன்னணிக்கு வந்தார். சூர்யா கவனிக்கப்பட்டார்.மேலே வந்தார்.இப்போ ஆர்யா.தொடர்ந்து படங்கள் சரியானபடி தேர்வு செய்தால் அவருக்கும் ஸ்டார்டம் கிடைத்து விடும். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் மேக்கர் பாலா தான்.

முதலில் சேது.பலமான திரைக்கதையை வைத்துக் கொண்டு ஒரு சாதாரண இளைஞனின் அசாதாரண வாழ்க்கையை சித்திரித்த படம். விக்ரமின் உழைப்பால் ஓஹோவென்று ஓடியது.வேறு யாராவது நடித்திருந்தாலும் சுமாராக ஓடியிருக்கும்.

அடுத்து நந்தா.இந்தப் படம் வந்த போது சூர்யா பெரிய ஹிட் எதுவும் கொடுத்திருக்கவில்லை.ராஜ்கிரனும் சரவணனும் வனவாசத்திலிருந்தார்கள்.படம் தொடங்கி 40 நிமிடங்களுக்குப் பிறகே ஹீரோவுக்கு முதல் டயலாக் கொடுத்தார் பாலா.நிஜமான விஷுவல் ட்ரீட்.

பிறகு பிதாமகன்.ஸ்டார் வேல்யூ அதிகமிருந்த படம்.விக்ரமின் கடும் உழைப்பாலும் சூர்யாவின் Versatalityயாலும்படம் பிய்த்துக் கொண்டு ஓடியதோடல்லாமல் தேசிய விருதும் வாங்கியது.கடைசியாக நான் கடவுள்.இந்தப் படத்தைப் பற்றி நீங்களே நிறைய சொந்த அபிப்பிராயம் வைத்திருப்பீர்கள்.

டிரென்ட் செட்டராக தனது இன்னிங்ஸை ஆரம்பித்தவர் இன்னும் டிரென்ட்களை உருவாக்குவாரா ? சந்தேகம் தான் ! பாலா படங்கள் கேள்விப்படாத பயோகிராஃபியாகவே இருக்கிறது. பெரும்பாலும் விளிம்பு மனிதர்களின் பயோகிராஃபி.மனநலம் சரியில்லாதவன்,சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வாழ்ந்தவன், வெட்டியான்,அகோரிகள் என்று நாம் கவனிக்க மறந்த மனிதர்களின் வாழ்க்கை.அதே போல பாலா படங்களின் இன்னொரு விசேஷம் படம் நெடுக இழையோடும் நகைச்சுவை, பின்பு அதிரடியான கிளைமாக்ஸ்.பிறகு Charecterization. இந்த கேரக்டர் எப்படி முழிப்பான், எப்படி பேசுவான் என்பதிலிருந்து அந்த நடிகரின் ஒவ்வொரு அசைவிலும் அந்த கேரக்டரை வெளிப்படச்செய்வது.மேற்படி விஷயங்களை அவர் படங்களை திறனாய்வு செய்து பட்டம் வாங்கப் போகிறவர்கள் கையில் விட்டு விடுவோம்.மற்றொன்று படங்களின் நீளம்.எல்லாமே அதிகபட்சம் 120 நிமிடங்கள் ஓடக்கூடியவை.

சரி! அடிக்கடி தேசியவிருது வாங்கும் டைரக்டர் என்ன செய்யலாம்? அவர் படங்களைப் போல சிலவற்றைத் தயாரிக்கலாம்.சில முக்கியமான படங்களுக்கு திரைக்கதை அமைத்துத் தரலாம்.அதைவிட முக்கியமானது , அவரைப் போன்று நேட்டிவிட்டி,எதார்த்தம் என்று எடுக்கப்படும் கொடுமைகளில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றலாம். தமிழின் ஆகச் சிறந்த நாவல்கள் திரைப்படமாகாமலே உள்ளன. அதற்குத் திரை வடிவம் தரலாம். உ.தா. ஒரு புளியமரத்தின் கதை.

எங்களுடைய எதிர்பார்ப்பெல்லாம் ஒரே மாதிரியான Genre ல்  தேங்கி விடாமல் அடுத்தடுத்து வெவ்வேறு கேரக்டர்களில் உங்கள் படங்களைப் பார்க்க வேன்டும் என்பது தான். யோசித்துப் பாருங்கள் ! ரஜினிகாந்தை வைத்து முள்ளும் மலரும் போல ஒரு படத்தை பாலா எடுத்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்?
தமிழ் சினிமாவிலிருந்து இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு படங்களை அனுப்பும் டைரக்டர்கள் கவனிக்கவும்.பாலாவிடமிருந்து கற்றுக்கொள்ள மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றது.

1. நம்மிடமே ஏராளமான கதைகள் உள்ளன. நாவல்கள் சிறுகதைகள் என்று கணக்கிலடங்காமல் இருக்கின்றன.
2. அபத்தமாக காப்பியடிக்காதீர்கள்.இன்ஸ்பிரேஷன் வேறு பிளாகியாரிஸம் வேறு.முப்பது ரூபாய்க்கு பைசைக்கிள் தீவ்ஸும் ரஷோமோனும் கிடைக்கிறது.
3. கிளைமாக்ஸ். பாலாவின் கிளைமாக்ஸ் காட்சிகளைப் பற்றி ஒரு தனி ஆய்வே நடத்தலாம்

பாலா அவர்களே!உங்களை அறியாமலே நீங்கள் ஸ்டார்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் டைரக்டர்களை உருவாக்க வேண்டுமென்பதே எங்கள் ஆசை.ஆஸ்கர் விருது வாங்கும் திறமைகள் நம்மிடம் இருந்தும் தமிழ் சினிமா ஆடியன்ஸான நாங்கள் யோகி பொக்கிஷம் போன்ற படங்களை தியேட்டரில் அதிக காசு கொடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பாலாவிடமிருந்து வருஷத்துக்கு ஒரு படமாவது எதிர்பார்ப்பதில் தவறில்லயே. தவிர மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் ஓரங்கட்டப் பட்டவர்களின் கதையையே எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு வித சலிப்பு தட்டி விடாதா? உங்கள் அடுத்த படத்தில் முற்றிலும் வேறான கதாபாத்திரங்களோடு ஒரு விஷுவல் ட்ரீட் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நீங்கள் Director's Director ஆகிவிட்டீர்கள்.

விண்ணைத் தாண்டி வருமா? கௌதம் மேனனுக்கு ஒரு வேண்டுகோள்!





பொதுவாக ரஹ்மான் பாடல்கள் 15 வது முறை கேட்கும் போதுதான் புரிய ஆரம்பிக்கும்.அதிலும் நடு நடுவில் எது இங்கிலீஷ் ராப் எது தமிழ் ராப் என்பது 33 வது முறை கேட்டால் தான் விளங்கும்.வி.தா.வருவாயாவும் விதிவிலக்கல்ல. பாடல்களின் நடுவே ஆங்கிலம் தமிழ் வித்தியாசாப் படுத்த ஒரு எளிய வழி ! பிளாஸி பாடினால் ஆங்கிலம் மற்றதெல்லாம் தமிழ். இந்தப் படத்தில் மலையாளமும் இருக்கிறதென்பது வேறு விஷயம். ஆஸ்காருக்குப் பின் தமிழில் ரஹ்மானுக்கு ராவணா தான் முக்கியமாக இருக்குமென்று நினைத்திருந்தேன்.


ஆனால் இந்தப் படமும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கௌதம் மேனனின் இசை ரசனை. மணிரத்தினத்துக்குப் பின் எல்லா படங்களிலும் பாடல்கள் ஹிட் ஆகவும் சூப்பர் ஹிட்டும் ஆகியது அநேகமாக கௌதம் மேனனுக்காகத்தான் இருக்கும்.

சும்மா சொல்லக் கூடாது.கௌதம் ஏமாற்றவில்லை. முதலில் ஹோசன்னாவா , ஹொசானா வா....ஏற்கனெவே எல்லா பண்பலைகளிலும் போட்டுத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து ஓமனப்பெண்ணே பாடல். நிச்சயம் சன் ம்யுசிக்கிலும் இசையருவியிலும் ஏகப்பட்ட டெடிகேஷன்கள் கேட்டுப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள். அப்புறம் தேவன் & சின்மயி பாடும் பாடல். லேசாக பாய்ஸ் படத்தில் அட்னன்சாமியின் பூம் பூம் பாடலை நினைவுபடுத்துகிறது. பிறகு கார்த்திக் பாடியிருக்கும் டைட்டில் பாடல். டிரேட்மார்க் ரஹ்மான் பாடல். "மன்னிப்பாயா" என்று ஒரு பாடலில் ஷ்ரேயா கோஷல் ரஹ்மானுடன் சேர்ந்து உருகுகிறார்.

ஆரோமலே - மிகவும் கவர்ந்த பாட்டு இதுதான். லேசான ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பிக்கும் பாடல் முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பாடப்பட்டிருக்கிறது. அநேகமாக தமிழ் படத்தில் முழு மலையாளப் பாடல் இதுவாகத்தான் இருக்கும். கண்ணுக்குள் கண்ணாய் பாடலை என்னதான் தாமரை அட்டகாசமாக எழுதியிருந்தாலும் லிரிக்ஸை தனியாக வாசித்தால்தான் பாடலே புரிகிறது.

விண்ணைத் தாண்டி வரட்டும் வராமல் போகட்டும் ... கௌதம் மேனனுக்கு என்னுடைய வேண்டுகோள் எல்லாப் பாடல்களையும் வலுக்கட்டாயமாக ஒரு படத்தில் திணிக்காதீர்கள் என்பது தான். இப்போதைய ரசிகர்கள் யாரும் எல்லாப் பாடலையும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. படத்தில் சுவாரஸ்யத்தையும் குறைக்கும், பாடலுக்கான உழைப்பும் வீண். பாடல்களை டி.வி யில் மட்டும் காட்டிவிட்டு அந்தந்த சிச்சுவேஷன்களில் Sound Track  மட்டும் ஒலிக்கச் செய்யுங்கள். நிறைய மலையாளப் படங்களிலும் ஏன் ஹிந்தி படங்களில் கூட பாடல்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்து விட்டார்கள்.

குறிப்பாக இந்தப் படம் வருகிற நேரம் வைக்கப் படுகின்ற வேண்டுகோளில் எங்களைப் போன்றவர்களின் சுயநலமும் இருக்கிறது கௌதம் சார்!ஏதோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துவதற்காகவோ ரஹ்மானின் வெறியன் என்பதற்காகவோ சொல்லவில்லை. இந்த மாதிரி அற்புதமான பாடல்களுக்கு சிம்பு கையை காலை ஆட்டி பண்ணப்போகும் கூத்துக்களைப் பார்க்கிற தைரியம் எங்களுக்கு இல்லை சாமி! அதற்காகவாவது ப்ளீஸ் கௌதம்....

ஆயிரத்தில் ஒருவன்: இல்ல இல்ல நிறைய பேரு!






இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது..இது ரொம்ப புதுசு என்பார்களே..அது இந்தப் படத்துக்கு ஓரளவு பொருந்தும்.ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், காதில் பூ வைக்கும் சமாச்சாரங்கள் என்று நிறைய இருந்தும் படம் 3 மணி நேரம் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

கி.பி 1279 ல் கடைசி சோழ மன்னன் தன் நாட்டை இழக்கும் போது தன் வாரிசைக் காப்பாற்றி தொலைவில் வியட்னாம் அருகில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்பிவிடுகிறான்.கூடவே முன்பு கைப்பற்றி இருந்த பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும். வாரிசுக்கு அரணாக நிறைய தடைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்குப் பிறகு தொல் பொருள் ஆராய்ச்சியாளரான பிரதாப் போத்தன் அந்த இடத்தைத் தேடிப் போய் தொலைந்து விடுகிறார்.அவரைக் கண்டு பிடிக்க ரீமா சென் தலைமையில் ஒரு அழகம் பெருமாள் புடை சூழ ஒரு டீம். அதற்கு துணையாக ஆண்ட்ரியா.ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே ஓலைச்சுவடியைப் படித்து தெரிந்து தீவை அடைய வழி தெரிகிறது. இவர்களுக்கெல்லாம் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கூலி வாங்கிகொண்டு கப்பலில் துணைக்கு வரும் ஹெல்பர்கள். மொத்தம் ஏழு தடங்கல்கள். தண்ணீரில் அலையும் விஷ ஜந்து,காட்டுவாசிகள், புதைகுழி,சர்ப்பம் பசி தாகம் ,கடைசியாக கிராமம் என்று அத்தனையும் அட்டகாசம். எல்லாவற்றையும் கடந்து போகும் கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியாவுக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி!

அங்கே இன்னும் சோழர்கள் வாழ்கிறார்கள்.சோழ ராஜனாக பார்த்திபன்! கார்த்தி, ரீமா ஆண்ட்ரியா மூவரையும் கட்டிப் போட்டு சித்திரவதை செய்க்றார்கள். ரீமா சென் யார் என்பது தெரியும்பொழுது ஆரம்பிக்கிறது கதை. தான் கொண்டுவந்த செய்தி ஒன்று உள்ளது என்ற படி, ராஜாவிடம் கலவி செய்த பிறகே சொல்வேன் என்பதும்..அதன் பின் வரும் காட்சிகளும் அட்டகாசம். சோழ மக்கள் அங்கே உமக்காகக் காத்திருக்கிறார்கள், ராஜ்யத்தை ஏற்கவேண்டும் என்பதே அந்த செய்தி என்று ரீமா ஆசை காட்ட சோழ ராஜாவான பார்த்திபனும் மக்களுடன் நாடு திரும்ப ஒத்துக்கொள்கிறார். பார்க்திபனும் ரீமாவும் சண்டை போடும் காட்சியிலும் பின்பு படம் முடியும் வரை நாம் கேட்கும் தமிழும் இதற்கு முன் நிறைய சரித்திரக் கதைகளில் கூட கேட்காதது. ரீமா பாண்டிய பேரரசின் வாரிசு என்பதோடு நிறுத்தியிருக்கலாம். கமாண்டொ ஆஃபிசரான அழகம் பெருமாளும் இன்னும் ஏழு பேரும் பாண்டிய வாரிசுகள் என்பதும் கடைசியில் போரின் போதும் கூட ஆர்மி ஆட்களுடன் அவர்கள் பழைய பாண்டியர்கள் டிரெஸ்ஸில் இருப்பது உறுத்துகிறது.

சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி கிளாடியேட்டர் பாணியில் ஒரு மைதானத்தில் நடக்கும் சண்டையில் சோழர்களிடையே ஹீரோவாகி சோழப் படையுடனே சேர்ந்து விடுகிறார். போர் வியூகம் வகுப்பதெல்லாம் கூட சார் தான். கடைசியில் போரில் என்ன ஆகிறது ? காணாமல் போன பிரதாப் போத்தன் என்ன ஆனார்..?சோழ மன்னன் நாடு திரும்பினானா...அவனது வாரிசை யார் காப்பாற்றுவது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை வெள்ளித்திரையில்.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா , ரீமா சென் , பின்னணி இசை மற்றும் செல்வ ராகவன். இப்படி ஒரு கதையை யோசித்ததற்கே அவரைப் பாராட்டலாம். பார்த்திபன் அறிமுகமாகும் காட்சியிலும், புதைகுழி காட்சிகளிலும் செல்வராகவன் நிமிர்கிறார். ஆனால் நிறைய இடங்களில் பல இங்கிலீஷ் படங்கள் கண்முன் தோன்றி மறைகின்றன. 300, கிளாடியேட்டர் என்று ஏகப்பட்ட படங்கள். ஆனால் தமிழிலும் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்களே.அதுவும் பழைய படங்களில் வருவது போலல்லாமல், நிஜமாக.படத்தில் நிறைய ரத்தம்,வன்முறை.

ஆனால் படம் பார்க்கும் போது அது பொருட்டாகவே இல்லை. ரீமா, பார்த்திபன், கார்த்தி , ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் என்று ஆயிரத்தில் நிறைய பேர் படத்தைத் தூக்கி நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை தமிழ் படங்கள் பார்க்கும் போதும் பிளாகில் கண்டபடி ஓட்ட வேண்டும் என்றே தோன்றும். இந்தப் படத்தில் ஓட்டுவதற்கு நிறைய இருந்தும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை.

"துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்.